வேதாரண்யம் மற்றும் சுற்றுப்பகுதி மக்களுக்கு வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து, உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
வேதாரண்யம் பகுதியில் நூற்றுக்கணக்கானோர் வாந்தி, வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டு, அண்மையில் அரசு, தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதைத் தீவிரமாகக் கருதிய பொது சுகாதாரம், மருத்துவம் மற்றும் உள்ளாட்சித் துறை அலுவலர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், வயிற்றுப்போக்குக்கு காரணமாக இருக்கக்கூடிய உணவகங்கள், தேநீர்க் கடைகள், குளிர் பான விற்பனைக் கடைகள் மற்றும் தங்கும் விடுதிகளில் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு
மேற்கொண்டனர். நாகை மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் ஜி. வரலெட்சுமி தலைமையில் மாவட்ட அலுவலர் ஏ.டி. அன்பழகன் உள்ளிட்ட அலுவலர்கள் வேதாரண்யம், கோடியக்கரை, அகஸ்தியம்பள்ளி, தோப்புத்துறை மற்றும் ஆயக்காரன்புலம் ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தனர்.
அப்போது, உணவகங்களில் குளோரின் கலந்த குடிநீர் பயன்படுத்தப்படுகின்றதா என பரிசோதனை செய்த அவர்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என கடைக்காரர்களை
அறிவுறுத்தினர்.