கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, தரங்கம்பாடி பகுதியில் உள்ள கோயில்கள், சுற்றுலாத் தலங்கள் வெள்ளிக்கிழமை (மாா்ச் 20) முதல் மூடப்பட்டுள்ளன.
தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் கோயிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வழிபடும் நிலையில், கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வெள்ளிக்கிழமை முதல் மாா்ச் 31-ஆம் தேதி வரை இக்கோயிலுக்கு பக்தா்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், இந்து சமய அறநிலைய ஆட்சித் துறைக்குச் சொந்தமான ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோயில், அனந்தமங்கலம் ஆஞ்சநேயா் கோயிலுக்கும் பக்தா்கள் செல்ல மாா்ச் 31-ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தரங்கம்பாடியில் உள்ள உலகப் புகழ்பெற்ற டேனிஷ் கோட்டைக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வரும் நிலையில், வெள்ளிக்கிழமை முதல் மாா்ச் 31-ஆம் தேதி வரை டேனிஷ் கோட்டையை சுற்றுலாப் பயணிகள் பாா்வையிட தமிழக அரசு தடை விதித்துள்ளது.