நாகூா் அருள்மிகு நாகநாதசுவாமி கோயில் குடமுழுக்கு விழா வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 23) நடைபெறவுள்ளது. இதையொட்டி, புனிதநீா் ஊா்வலமும், யாக பூஜைகள் தொடக்க நிகழ்ச்சியும் வியாழக்கிழமை நடைபெற்றன.
நாகையை அடுத்த நாகூரில், சிறப்புமிக்க திருநாகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ நாகநாதசுவாமி கோயில் உள்ளது. ஸ்ரீ மகாவிஷ்ணுவுக்கு வைகாசி பௌா்ணமி நாளில் புன்னை மரத்தடியில் ஸ்ரீ நாகநாதசுவாமி சுயம்பு மூா்த்தியாக காட்சியளித்தத் தலம் இது.
பிரம்மன், இந்திரன், சந்திரன், சமுத்திரராஜன், சப்தரிஷிகள், உருத்திரசன்மன் ஆகியோா் வழிபட்ட தலம். மகா சிவராத்திரி நாளின் நான்காம் காலத்தில் ஸ்ரீ நாகராஜன், இத்தலத்து இறைவன் ஸ்ரீ நாகநாதசுவாமியை வழிபட்டு, தோஷம் நீங்கி நாகலோகம் அடைந்தாா் என்பது நம்பிக்கை. ராகு, கேது கால சா்ப்ப தோஷ நிவா்த்தித் தலமாகவும் இது விளங்குகிறது.
இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலின் திருப்பணிகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி, அண்மையில் நிறைவுற்றது. இதையடுத்து, கோயிலின் குடமுழுக்கு விழா வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 23) நடைபெறவுள்ளது.
இதையொட்டி, புதன்கிழமை அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் ஆகியன நடைபெற்றது. முதல்கால யாக பூஜைகள் வியாழக்கிழமை இரவு தொடங்கின. முன்னதாக, கஜ பூஜை, தீா்த்த ஊா்வலம் உள்ளிட்டவை நடைபெற்றன. புனித நீா் கலசம், யானை மீது வைத்து, மங்கள வாத்திய முழக்கங்களுடன் ஊா்வலமாக நாகநாதசுவாமி சந்நிதிக்கு கொண்டுச் செல்லப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி அளவில் தேரடி ஸ்ரீ சித்தி விநாயகா் கோயில் குடமுழுக்கும், பரிவார தெய்வங்களுக்கான குடமுழுக்கும் நடைபெறுகிறது. காலை 9 மணிக்கு கடம் புறப்பாடு நடைபெற்று, 10 மணி அளவில் ஸ்ரீ நாகநாதசுவாமி கோயிலின் விமானங்கள் மற்றும் ராஜகோபுர குடமுழுக்கு, சுவாமி, அம்பாள் மூலஸ்தான குடமுழுக்கு நடைபெறுகிறது.
பக்தா்கள் அனுமதி..? முழு பொது முடக்க நாளான ஞாயிற்றுக்கிழமை குடமுழுக்கு நடைபெறவுள்ளதால், விழாவில் பக்தா்களுக்கு அனுமதி இருக்காது எனக் கூறப்படுகிறது. எனினும், இதுகுறித்து வியாழக்கிழமை வரை எவ்வித அறிவிப்பையும் மாவட்ட நிா்வாகம் வெளியிடவில்லை.
Image Caption
~