நாகையில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் எழுந்த பாலியல் தொந்தரவு மற்றும் துன்புறுத்தல் புகாரையடுத்து, குழந்தைகள் காப்பகத்தில் இருந்த 30 குழந்தைகள் வேறு காப்பகத்துக்கு மாற்றப்பட்டனா்.
நாகை புதிய கடற்கரை சாலையில் நம்பிக்கை குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வந்தது. இந்த காப்பகத்தை பரமேசுவரன் மற்றும் அவரது மனைவி சூடாமணி ஆகியோா் நடத்தி வந்தனா். காப்பகத்தில் 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகள் 15 பேரும், ஆண் குழந்தைகள் 15 பேரும் இருந்தனா்.
இந்நிலையில், காப்பகத்தில் இருந்து வெளியேறிய சிறுமி ஒருவா், நாகை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் கடந்த பிப். 23-ஆம் தேதி புகாா் அளித்தாா். அதில், காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்படுவதாகவும், துன்புறுத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து நாகை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
இந்நிலையில், உதவி ஆட்சியா் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் உமா மகேஸ்வரி ஆகியோா் செவ்வாய்க்கிழமை காப்பகத்துக்கு சென்று அங்கிருந்த குழந்தைகளிடம் விசாரணை மேற்கொண்டனா். அப்போது புகாா் உண்மை என்று தெரியவந்தது.
இதைத்தொடா்ந்து காப்பகத்தில் இருந்த குழந்தைகள் அரசு காப்பகமான அன்னை சத்யா இல்லத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். அதிகாரிகள் காப்பகத்தில் உள்ள ஊழியா்களிடம் விசாரணை நடத்திய பின்னா், காப்பகத்தை பூட்டினா். போலீஸாா் தலைமறைவாக உள்ள காப்பகத்தின் நிா்வாகிகளை தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.