தஞ்சை-காரைக்கால் ரயில் பாதை மின்மயப் பணி விரைவில் நிறைவேறும்: திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர்
தஞ்சாவூர்- காரைக்கால் ரயில் பாதை மின் மயமாக்கப்படும் பணியை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் உதயகுமார்ரெட்டி தெரிவித்தார்.
தஞ்சாவூர்- காரைக்கால் ரயில் பாதை மின் மயமாக்கப்படும் பணியை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் உதயகுமார்ரெட்டி தெரிவித்தார்.
திருவாரூர் ரயில் நிலையத்தில் நடைமேடை, நிலைய முகப்புப் பகுதி, வாகன நிறுத்தம் உள்ளிட்டப் பகுதிகளை புதன்கிழமை ஆய்வு மேற்கொண்ட அவர், செய்தியாளர்களிடம் கூறியது: தஞ்சாவூர்- கரைக்கால் ரயில் பாதை மின்மயமாக்கப்படும் பணிகள் எப்போது முடியும் என உறுதியாக கூற முடியாது. இருப்பினும், பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மன்னை- சென்னை விரைவு ரயிலை திருவாரூர் வழியாக இயக்க தற்போதைக்கு வாயப்பு இல்லை. பயணிகளின் எண்ணிக்கையை வைத்து ரயில் இயக்கம் பற்றி முடிவெடுக்கப்படும். தீபாவளி பண்டிகை நெருங்குவதால் ரயில் பயணிகள் பட்டாசுகளை ரயிலில் எடுத்து செல்ல வேண்டாம். விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றார் உதயகுமார்ரெட்டி.
ஆய்வின்போது, திருச்சி முதுநிலை மண்டல வணிக மேலாளர் அருண்தாமஸ் உடனிருந்தார்.
ரயிலை மறித்து மனு அளிப்பு: முன்னதாக, காரைக்காலில் ரயில் பாதையை ஆய்வு செய்த திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் உதயகுமார் ரெட்டி, திருவாரூருக்கு ரயிலில் வந்துகொண்டிருந்தார். இந்த ரயிலுக்காக, அடியக்கமங்கலத்தில் ரயில்வே கடவுப் பாதை நீண்ட நேரம் மூடப்பட்டிருந்தது. இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள், ரயில்வே கோட்ட மேலாளர் உதயகுமார் ரெட்டி வந்த ரயிலை மறித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், இப்பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் எனக் கோரி மனு அளித்தனர். இதற்கிடையில், அங்கு வந்த போலீஸாருக்கும், பொதுமக்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், பொதுமக்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்டு கலைந்து சென்றனர்.