திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காவலர் நினைவு தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
சட்டம்- ஒழுங்கு மற்றும் இயற்கை சீற்றங்களினால் ஏற்படும் பாதிப்புகளின் போது தன் குடும்பத்தையும் மறந்து நம் தேசத்துக்காக பணியாற்றி உயிர் நீத்த காவல் படை வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் அக்.21-ஆம் தேதி தேசிய காவலர் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
அதன்படி, திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் அமைந்துள்ள நினைவுத் தூணில் காவல் துறையில் பணியிலிருக்கும்போது நாட்டுக்காக உயிர் நீத்த தியாகச் செம்மல்களுக்கு "நீத்தார் நினைவு தினம்" அனுசரிக்கப்பட்டது. திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எம். மயில்வாகனன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜான்சன், தனிப்பிரிவு ஆய்வாளர் லட்சுமணன்,முன்னிலையில் காவல்துறையின் சம்பிரதாய முறைப்படி துப்பாக்கி குண்டுகள் வானை நோக்கி முழங்க இந்தியா முழுவதும் இன்னுயிர் நீத்த 379 வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியையொட்டி, ஆயுதப்படை ஆய்வாளர் இளங்கோ தலைமையில் நீத்தார் நினைவு தின அணிவகுப்பு நடைபெற்றது. சத்தீஸ்கர் மாநிலம் சவுத்சுக்மா மாவட்டத்தில் 24.4.2017-ஆம் தேதி நிகழ்ந்த நக்சலைட் தாக்குதலில் உயிரிழந்த திருவாரூர் மாவட்டம் ஆவிச்சாவடி பத்பநாதன், நீடாமங்கலம் காமராஜர் காலனியைச் சேர்ந்த செந்தில்குமார் ஆகியோருக்கு அஞ்சலியும், அவர்களது குடும்பத்தினருக்கு மரியாதை செய்யப்பட்டது.