மன்னார்குடி அருகே முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில், உருட்டுக் கட்டையால் தாக்கியதில் ஒருவர் வியாழக்கிழமை காயமடைந்தார்.
கோட்டூர் தோட்டத்தில் சகாயம் என்பவர் சட்டவிரோதமாக மதுப்புட்டிகளை விற்பனை செய்து வந்தாராம். இதை எதிர்த்து பள்ளிவாசல் தெரு க. இஸ்மாயில் (51) என்பவர் தலைமையில், கிராம கமிட்டியினர் தீர்மானம் நிறைவேற்றினராம். இதனால் இஸ்மாயிலுக்கும், சகாயத்துக்கும் விரோதம் இருந்து வந்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில், இஸ்மாயிலிடம் பிரச்னை குறித்து சகாயம் மகன் சேவியர் (25) பேசியபோது இருதரப்புக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டத்தில், சேவியர் உருட்டுக் கட்டையால் தாக்கியதில் காயமடைந்த இஸ்மாயில், மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கோட்டூர் போலீஸார் வழக்குப் பதிந்து சேவியரை கைது செய்தனர்.