நீடாமங்கலம் அருகே வீடுபுகுந்து 3 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடிவருகின்றனர்.
முன்னாவல்கோட்டை வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் திருஞானம் (72). இவர் கடந்த சனிக்கிழமை இரவு வழக்கம்போல் தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மர்மநபர் ஒருவர் வீட்டின் பின்பக்கக் கதவைத் திறந்து உள்ளே புகுந்து, பீரோவில் இருந்த சுமார் 3 பவுன் நகைகளைத் திருடிச் சென்றார். அப்போது, சப்தம் கேட்டு எழுந்த திருஞானம் குடும்பத்தினர், அவரை பின்தொடர்ந்து விரட்டிச் சென்றனராம். எனினும், அந்த நபர் அதற்குள் ஓடி மறைந்துவிட்டார். இதுகுறித்து நீடாமங்கலம் போலீஸார் வழக்குப்பதிந்துள்ளனர்.