கூத்தாநல்லூரில் சாலையோர கடைகளை அகற்றக் கோரி, நுகர்வோர் பாதுகாப்புக் குழு அண்மையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
குறட்பாசித்தர் இரா. செல்வராசனார் தலைமையில் நடைபெற்ற நுகர்வோர் பாதுகாப்புக்குழு மற்றும் சுற்றுச் சூழல் ஆராய்ச்சி மையத்தின் சங்கக் கூட்டத்தில், கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்; வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகட்டித் தர வேண்டும்; கூத்தாநல்லூர் நகராட்சிக்குள்பட்ட வி.பி.எம். சாலையில் வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் வகையிலான கடைகளை அகற்றி, ஆற்றோரத்தில் வியாபாரம் செய்ய ஆவன செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு, துணைத் தலைவர் எம். சுப்ரமணியன், அமைப்புச் செயலாளர் எஸ். தனபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கௌரவத் தலைவர் கோஸ். அன்வர்தீன், டி. ஸ்ரீதர், ஏ. மைதீன், எஸ். அறிவழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். செயலாளர் இரா. கருணாநிதி வரவேற்றார். பொருளாளர் ப. கண்ணன் நன்றி கூறினார்.