நியூஸிலாந்து பள்ளிவாசலில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அதன் திருவாரூர் மாவட்டச் செயலாளர் எச். பீர்முகமது வெளியிட்ட அறிக்கை:
நியூஸிலாந்து, கிறைஸ்ட்சர்ச் நகரில் உள்ள அல் நூர் பள்ளிவாசலில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம், அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எங்கள், எண்ணங்களும், பிரார்த்தனைகளும் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டோருடனும், அவர்களது குடும்பத்தார்களுடனும் என்றும் உள்ளது. அவர்கள் விரைவாக இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப, எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்.
இந்த கொடூரமான கொலைகள், இஸ்லாமியர்கள் மீதான கண்மூடித்தனமான வெறுப்பின் வெளிப்பாட்டால், நன்கு திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டுள்ளன. மேலும், இந்தக் கொடூரத் தாக்குதல் முகநூலில் நேரலை செய்யப்பட்டிருப்பதன் மூலம், இது தெளிவான முஸ்லிம் விரோதப் போக்கு என்பதை உணர்த்துகிறது. கொடூர நெஞ்சம் கொண்டவர்களால் மட்டும்தான் இதுபோன்ற பயங்கரவாதச் செயலை செய்ய முடியும். எந்த மதமாக இருந்தாலும் அதன் பெயரால் நடக்கும் எந்தத் தாக்குதலையும் இஸ்லாம் மார்க்கம் அனுமதிக்காது. இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.