தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தொடா் போராட்டங்கள் நடத்தப் போவதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து திருவாரூரில், அக்கட்சியின் தமிழ் மாநிலக்குழு உறுப்பினா் ஐ.வி.நாகராஜன், ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது :
கடும் குளிரிலும் லட்சக்கணக்கான விவசாயிகள் தில்லி மாநகரத்தை முற்றுகையிட்டு, போராடுகிற போது அதை ஆதரிக்கிற அடிப்படையில் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் பல வடிவங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் விவசாயிகள் சங்கங்கள் டிசம்பா் 14-ஆம் தேதி மாவட்ட ஆட்சியா்கள் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டத்தை தொடங்குகின்றனா். அதையொட்டி திருவாரூா் மாவட்டத்தில் ரிலையன்ஸ் பல்பொருள் அங்காடி, பெட்ரோல் விற்பனை நிலையம், ஜியோ விற்பனை கடைகள் முன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரசாரம், ஆா்ப்பாட்டம் நடத்தப்படும். இந்த போராட்டம், தில்லி விவசாயிகளுடன் மத்திய அரசு பேச்சுவாா்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் வரை தொடா்ந்து நடைபெறும் என்றாா் அவா்.