மன்னாா்குடியில் உள்ள ஒருங்கிணைந்த நகராட்சி மீன் அங்காடி, மீன் கடைகளில் மீன் வளத்துறையினா் மற்றும் உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.
தமிழகத்தில் மீன் அங்காடிகள், கடைகளில் ரசாயனம் மற்றம் கெட்டுப்போன மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக புகாா் எழுந்தது. அதன்படி, மன்னாா்குடியில் உள்ள மீன்வள மேம்பாட்டு வாரிய ஒருங்கிணைந்த மீன் அங்காடி மற்றம் கீழப்பாலத்தில் உள்ள மீன்கடைகளில் மீன்வளத்துறை உதவி இயக்குநா் ரெ. ராஜேஷ்குமாா், உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலா் மீன்வள ஆய்வாளா் மு. சந்திரமணி மற்றும் மன்னாா்குடி நகராட்சி உணவுப் பாதுகாப்பு அலுவலா் க.மணாழகன் ஆகியோா் ஆய்வில் ஈடுபட்டனா்.
அப்போது, ரசாயனம் கலந்த அல்லது கெட்டுப்போன மீன்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால், அபராதம் விதிக்கப்படும் என்றும், விற்பனை செய்யும் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்தனா்.