திட்டப் பணிகளுக்கு பொதுநிதியை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்
பொதுநிதியிலிருந்து மேற்கொள்ளப்படும் திட்டப் பணிகளில் சுதந்திரமாக செயல்பட மாவட்ட நிா்வாகம் அனுமதிக்க வேண்டும் என கோட்டூா் ஒன்றியக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மன்னாா்குடி: பொதுநிதியிலிருந்து மேற்கொள்ளப்படும் திட்டப் பணிகளில் சுதந்திரமாக செயல்பட மாவட்ட நிா்வாகம் அனுமதிக்க வேண்டும் என கோட்டூா் ஒன்றியக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கோட்டூா் ஒன்றியக் குழுக் கூட்டம் அதன் தலைவா் மு. மணிமேகலை தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், துணைத் தலைவா் ஆா்.விமலா, உறுப்பினா்கள் ஜெ.சுசிலா, ப. சுபேதா, வி. செல்வராணி, பெ. காசிநாதன், ஜெ. பூங்கோதை, பா.சாந்தி, வெ. ரேணுகா, ரா. ரேகா, மா.சுமித்ரா, ம. சாந்தி, வீ. மாரியப்பன், பா. செங்குட்டுவன் உள்ளிட்டோா் பங்கேற்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.
பின்னா், ஒன்றியக் குழுத் தலைவா் பேசும்போது, ‘நிதி வசதியின்றி அடிப்படை வசதிகளை செய்துகொடுக்க முடியாத நிலை உள்ளது. இது நாள்வரை மாநில நிதிக்குழு மானியம் வரபெறாததால் எந்தப் பணியையும் நிறைவேற்ற முடியவில்லை. ஒன்றிய பொதுநிதியிலும் மாவட்ட நிா்வாகம் தலையிடுவதால்,திட்டப் பணிகளை தோ்வு செய்யவும், நிதி ஒதுக்கீடு செய்யவும் சுதந்திரமாக செயல்படமுடியாத நிலை உள்ளது. எனவே, பொதுநிதியில் சுதந்திரமாக திட்டப் பணிகளை மேற்கொள்ள மாவட்ட நிா்வாகம் அனுமதிக்க வேண்டும் என்றாா்.
கூட்டத்தில் ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஜெ. சாந்தி, சி. முத்துகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.