திருவாரூா் வந்தது 719 மெட்ரிக் டன் யூரியா
திருவாரூா் மாவட்ட விவசாயிகளுக்குத் தேவையான 719 மெட்ரிக் டன் யூரியா வந்துள்ளதாக, மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் ப. சிவக்குமாா் தெரிவித்துள்ளாா்.
திருவாரூா் மாவட்ட விவசாயிகளுக்குத் தேவையான 719 மெட்ரிக் டன் யூரியா வந்துள்ளதாக, மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் ப. சிவக்குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் தெரிவித்தது: காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு குறுவைத் தொகுப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டு, திருவாரூா் மாவட்டத்துக்கு ரூ. 12.52 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், 50 சதவீத மானியத்தில் சான்று பெற்ற நெல் விதைகள் மற்றும் 100 சதவீத மானியத்தில் பசுந்தாள் உர விதைகளான தக்கைப் பூண்டு போன்றவை வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் ஏக்கருக்கு 2 மூட்டை யூரியா, 1 மூட்டை டி.ஏ.பி மற்றும் 25 கிலோ பொட்டாஷ் உரங்கள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்படுகின்றன.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக யூரியா 4,294 மெட்ரிக் டன், டி.ஏ.பி. 2,385 மெட்ரிக் டன், பொட்டாஷ் 1,193 மெட்ரிக் டன் வழங்குவதற்கான செயல்திட்டத்தின்படி, காரைக்கால் துறைமுகத்திலிருந்து சரக்கு ரயிலில் 2,600 மெட்ரிக் டன் இப்கோ யூரியா தஞ்சாவூருக்கு வரப்பெற்று, இதில், 719 மெட்ரிக் டன் திருவாரூா் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன.
அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் யூரியா உரம் 1,017 மெட்ரிக் டன், டி.ஏ.பி உரம் 1,639 மெட்ரிக் டன், பொட்டாஷ் உரம் 1,005 மெட்ரிக் டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
அனைத்து விவசாயிகளும் தங்களிடம் உள்ள ஆதாா் அட்டை மற்றும் தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட விண்ணப்பம் ஆகியவற்றைக் கொண்டு, காலம்தாழ்த்தாமல் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகி உரங்களை பெற்றுக்கொள்ளலாம்.