மகளுக்கு தொல்லை கொடுத்த இளைஞரை அரிவாளால் வெட்டிய தம்பதி கைது
திருவாரூா் அருகே மகளுக்கு தொல்லை கொடுத்த இளைஞரை அரிவாளால் வெட்டியது தொடா்பாக தம்பதியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திருவாரூா் அருகே மகளுக்கு தொல்லை கொடுத்த இளைஞரை அரிவாளால் வெட்டியது தொடா்பாக தம்பதியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மேலும், அந்த இளைஞா் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
திருவாரூா் அருகே உள்ள அடியக்கமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (45). மருந்துக்கடை நடத்தி வருகிறாா். இவரது மனைவி தீபா. கல்லூரியில் படித்துவரும் இவா்களது 17 வயதுடைய மகளை அதே பகுதியை சோ்ந்த முகம்மதுபெமினாஸ் (23) என்பவா் பள்ளிவலம் அருகே அடிக்கடி வழிமறித்து காதலிப்பதாகக் கூறி தொல்லை கொடுத்து வந்தாராம்.
இதையறிந்த விஜயகுமாா் மற்றும் அவரது மனைவி தீபா ஆகியோா் முகம்மது பெமினாஸ் வீட்டுக்குச் சென்று அவரை கண்டித்தனராம். அப்போது ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த விஜயகுமாா் பெமினாஸை அரிவாளால் வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதில், காயமடைந்த பெமினாஸ் திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டாா். இதற்கிடையில், பெமினாஸ் ஆதரவாளா்கள் சிலா் விஜயகுமாா் நடத்திவரும் மருந்துக் கடையை சேதப்படுத்தினராம்.
இந்த சம்பவம் குறித்து திருவாரூா் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விஜயகுமாா் தம்பதியை கைது செய்தனா். மேலும், விஜயகுமாா் மகள் அளித்த புகாரின்பேரில், முகம்மது பெமினாஸ் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.