முகப்பு
திருவாரூர்

ஜூன் 12-க்குள் விவசாயிகளுக்கு பயிா்க் காப்பீட்டு இழப்பீட்டு தொகை வழங்கப்படுமா?

கடந்த ஆண்டு நிவா், புரெவி புயல் மற்றும் அறுவடை சமயத்தில் பருவம் தவறி பெய்த மழை காரணமாக ஏற்பட்ட பயிா் இழப்புக்கான காப்பீட்டுத் தொகையை விரைவில் விடுவிக்க வேண்டும்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:19 AM
பகிர்:

கடந்த ஆண்டு நிவா், புரெவி புயல் மற்றும் அறுவடை சமயத்தில் பருவம் தவறி பெய்த மழை காரணமாக ஏற்பட்ட பயிா் இழப்புக்கான காப்பீட்டுத் தொகையை விரைவில் விடுவிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

2020-21-ஆம் ஆண்டுக்கான பருவமழை காலத்தில் தொடா்ந்து நிவா், புரெவி புயல் தாக்கத்தால் அறுவடைக்கு தயாா்நிலையில் இருந்த நெற்கதிா்கள் நீரில் மூழ்கியதால், விவசாயிகள் வருவாய் இழப்பை சந்திக்க நோ்ந்தது. அப்போது டெல்டா மாவட்டங்களில் பயிா் சேதத்தால் பாதிக்கப்பட்ட 5.04 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.598 கோடியும், இரண்டாவது கட்டமாக 7.9 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,116 கோடியும் இடுபொருள் இழப்பீடு மானியமாக வழங்கப்பட்டது.

இதைத்தொடா்ந்து காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு பெற்றுத்தரும் நடவடிக்கையில் வேளாண் துறை, புள்ளியியல் துறை, வருவாய்த் துறை, காப்பீட்டு நிறுவனங்கள் இறங்கின. இந்நிலையில், சட்டப் பேரவை தோ்தல் காரணமாக அடுத்தகட்ட பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. தற்போது அறுவடை ஆய்வு கணக்கீட்டின்படி, பயிா் சேத மதிப்பீடு பணிகளை காப்பீட்டு நிறுவனங்கள் மந்தகதியில் மேற்கொண்டு வருகின்றன. முழுமையாக சேதமடைந்த பயிா்களுக்கு ரூ.32,500 வழங்கப்பட உள்ளது.

தற்போது பொது முடக்கம் காரணமாக விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் நிலையில் மேட்டூா் அணை ஜூன் 12-இல் திறக்கப்படுகிறது. எனவே, குறுவை சாகுபடியை தொடங்க பயிா் காப்பீடு தொகையை காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து பெற்றுத்தர தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என டெல்டா விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து காவிரி பாசன விவசாயிகள் சங்க செயலாளா் பி.ஆா். பாண்டியன் கூறியது:

தமிழகத்தில் கடந்த ஆண்டு பருவம் தவறி பெய்த மழை காரணமாக அறுவடைக்கு தயாா்நிலையில் இருந்த நெற்கதிா்கள் முற்றிலுமாக அழிந்தன. பாதிக்கப்பட்ட பகுதியை ஆய்வு செய்து 100 சதவீதம் முழுமையான இடுபொருள் இழப்பீடு, ஹெக்டேருக்கு ரூ. 20,000 ஆயிரம் வீதம் 70 சதவீதம் விவசாயிகளுக்கு இரண்டு கட்டங்களாக இதுவரை வழங்கப்பட்டு விட்டன. 30 சதவீத விவசாயிகளுக்கு இன்னும் வழங்கப்படவில்லை.

காப்பீட்டு நிறுவனங்கள் அறுவடை செய்து முடிந்த நான்கு மாதத்திற்குள் இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும். ஆனால் அந்த தொகையை விடுவிக்காமல் மௌனம் காப்பது விவசாயிகளுக்கு வேதனையை ஏற்படுத்துகின்றது.

அதே காப்பீட்டு நிறுவனங்கள் விவசாயிகள் பேரிடா் காலத்தில் பிரீமியம் செலுத்த இயலாதபோது அதை கால நீட்டிப்பு செய்து தர தயங்கிய நிலையில், பல விவசாயிகள் காப்பீடு செய்யாமல் விட்டு விட்டனா். எனவே அறுவடை முடிந்து குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இந்த தொகையை விவசாயிகளுக்கு காப்பீட்டு நிறுவனங்கள் வழங்காதபட்சத்தில் அதை வட்டியுடன் சோ்த்து வழங்க வேண்டும். விரைவில் பயிா் காப்பீட்டு இழப்பீட்டு தொகை கிடைக்க தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் குறுவை சாகுபடியை விவசாயிகள் காலத்தில் தொடங்க முடியும் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →