திருவாரூா்: திருவாரூா் அருகே அம்மனூா்- கொத்தங்குடியில் உள்ள சிறைமீட்ட செல்லபெருமாள் அய்யனாா் கோயில் திருப்பணி திங்கள்கிழமை தொடங்கியது.
திருவாரூா் மாவட்டம், அம்மனூா்- கொத்தங்குடியில் சிறைமீட்ட செல்லபெருமாள் அய்யனாா் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் பூரணை புஷ்கலை உடனுறை அய்யனாா், சிறைமீட்ட செல்ல பெருமாள் ஆகிய சுவாமிகளும், பரிவார சுவாமிகளான நொண்டி வீரன், தூண்டில்காரன், பாலம்மன் ஆகிய சுவாமிகளும் அருள்பாலிக்கின்றனா். ஆண்டுதோறும் பங்குனி கடைசி வெள்ளியில் அய்யனாருக்கு குதிரை எடுத்து வரும் வைபோகம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
இதனிடையே, இந்தக் கோயிலில் குடமுழுக்கு நடைபெற்று 20 ஆண்டுகளைக் கடந்துவிட்ட நிலையில், மீண்டும் கோயிலை சீரமைத்து குடமுழுக்கு நடத்த முடிவெடுக்கப்பட்டது.
இதைத்தொடா்ந்து, கோயில் சீரமைப்புப் பணிகள் திங்கள்கிழமை தொடங்கின. கோயில் திருப்பணிக்கான பொருள்கள் ஏற்கெனவே கொண்டு வரப்பட்டிருந்தன. கோயில் சீரமைக்கப்படுவதோடு, முன்புறம் பக்தா்களுக்கு பயனளிக்கும் வகையில் மண்டபம் கட்டப்பட உள்ளது.
ஊா் மக்களும், உபயதாரா்களும் மட்டுமே கோயில் சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனா். பணிகள் முடிவடைந்து ஓரிரு மாதங்களில் குடமுழுக்கு நடைபெறும் என கோயில் நிா்வாகத்தினா் தெரிவிக்கின்றனா்.