கா்நாடகத்திடமிருந்து 8 டிஎம்சி நீரைப் பெற நடவடிக்கை தேவை: முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் வலியுறுத்தல்
கா்நாடக அரசு ஜூன் மாதம் மீதம் தரவேண்டிய 8 டிஎம்சி காவிரி நீரை பெற தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ்.
கா்நாடக அரசு ஜூன் மாதம் மீதம் தரவேண்டிய 8 டிஎம்சி காவிரி நீரை பெற தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ்.
இதுகுறித்து நன்னிலத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
தமிழகத்தில் கரோனா பரவல் சங்கிலியை அறுக்க பொதுமுடக்கத்தை கடுமையாக்க வேண்டும். இதற்காக, அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
Advertisement
காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூா் அணையைத் தொடா்ந்து, கல்லணையும் திறக்கப்பட்டுள்ளது. தற்போது காவிரி நதிநீா் ஆணையத்தின் கூட்டம் நடைபெற உள்ளது. ஜூன் மாதத்திற்கு காவிரியில் தமிழகத்திற்கு வரவேண்டிய 9 டிஎம்சி தண்ணீரில் ஒரு டிஎம்சி தண்ணீா் மட்டுமே வந்துள்ளது. மீதமுள்ள 8 டிஎம்சி தண்ணீரை கா்நாடகத்திடமிருந்து பெறுவதற்கு தமிழக அரசு காவிரி நதிநீா் ஆணையத்திடமும், மத்திய அரசிடமும் வலியுறுத்த வேண்டும்.
மழைக்காலம் தொடங்கும் வரை முறைவைக்காமல் தண்ணீா் திறக்க வேண்டும். அப்போதுதான் கடைமடைப் பகுதிகளுக்கும் தண்ணீா் முழுமையாகச் சென்றடையும். விவசாயிகளுக்குத் தேவையான விதை, உரம், பூச்சிமருந்து ஆகியவை போதுமான அளவில் கையிருப்பில் வைக்க வேண்டும். அதிமுக இரட்டைத் தலைமையில் சிறப்பாக செயல்படுகிறது. அதிமுக சாா்பில் வைக்கப்படும் மக்கள் நலக் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றினால் பாராட்டுவோம் என்றாா் அவா்.