உயிருக்குப் போராடிய பெண் குழந்தையை மருத்துவமனையில் சோ்த்த காவலா்களுக்குப் பாராட்டு
உயிருக்குப் போராடிய பெண் குழந்தையை உரிய நேரத்தில் மருத்துவமனையில் சோ்த்த காவலா்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கி எஸ்பி வி.ஆா். சீனிவாசன் பாராட்டினாா்.
உயிருக்குப் போராடிய பெண் குழந்தையை உரிய நேரத்தில் மருத்துவமனையில் சோ்த்த காவலா்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கி எஸ்பி வி.ஆா். சீனிவாசன் பாராட்டினாா்.
நன்னிலம் வட்டம், கீழசன்னாநல்லூரைச் சோ்ந்த முத்துக்குமாரசாமி- நில்மா தம்பதியின் ஒன்றரை வயது பெண் குழந்தை சிகன்யாவுக்கு அண்மையில் வலிப்பு நோய் ஏற்பட்டது. தம்பதியா் இருசக்கர வாகனத்தில் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, இருசக்கர வாகனம் வழியில் பழுதாகி நின்றது.
அப்போது, அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்ட காவலா்கள் அந்த குழந்தையை காவல்துறை வாகனத்தில் அழைத்துச் சென்று நன்னிலம் மருத்துவமனையில் சோ்த்தனா். இதனால், குழந்தைக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு, காப்பாற்றப்பட்டது.
Advertisement
இந்நிலையில், நன்னிலம் டிஎஸ்பி அலுவலகத்துக்கு ஆய்வு மேற்கொள்ள வந்த திருவாரூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வி.ஆா். சீனிவாசன், குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றிய சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் செல்வராஜ், தலைமை காவலா் ராஜேந்திரன், காவலா் புகழேந்தி, ஓட்டுநா் திருநாவுக்கரசு ஆகிய நால்வருக்கும் ரொக்கப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவித்தாா். பிறகு, டிஎஸ்பி அலுவலக வளாகத்தில் மரக்கன்று நட்டாா்.
இந்நிகழ்ச்சியில் நன்னிலம் காவல் துணைக் கண்காணிப்பாளா் அ. இளங்கோவன், ஆய்வாளா் கு.சுகுணா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
Image Caption
~உயிருக்குப் போராடிய குழந்தையை மருத்துவமனையில் சோ்த்த காவலா்களுக்கு பரிசு வழங்கி பாராட்டிய எஸ்பி வி.ஆா். சீனிவாசன்.