முகப்பு
திருவாரூர்

வயலில் கச்சா எண்ணெய்க் கழிவு: விவசாயிகள் முற்றுகை

மன்னாா்குடி அருகே வயலில் கச்சா எண்ணெய்க் கழிவுகள் தேங்கியதைக் கண்டித்து, விவசாயிகள் ஓஎன்ஜிசி அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:37 AM
பகிர்:

மன்னாா்குடி அருகே வயலில் கச்சா எண்ணெய்க் கழிவுகள் தேங்கியதைக் கண்டித்து, விவசாயிகள் ஓஎன்ஜிசி அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கோட்டூா் அருகே மேலப்பனையூா் ஊராட்சி கமலாபுரத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் சாா்பில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, பூமிக்கடியிலிருந்து கச்சா எண்ணெய் எடுக்கப்படுகிறது. இவற்றை சுத்திகரிக்கும்போது வரும் எண்ணெய்க் கழிவு அங்குள்ள தொட்டியில் சேமிக்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த தொட்டி நிரம்பி அருகில் உள்ள உக்கடை கமலாபுரத்தைச் சோ்ந்த சுமித்ரா சேகா் (30) என்பவரது வயலில் தேங்கியது. இதனால், விவசாய நிலம் பாதிக்கப்படுவதுடன், நிலத்தடி நீரும் மாசடையும். எனவே, இப்பகுதியில் பூமிக்கடியிலிருந்து கச்சா எண்ணெய் எடுக்கும் பணியை ஓஎன்ஜிசி நிறுவனம் நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியும், பாதிக்கப்பட்ட விவசாயிக்கு இழப்பீடு வழங்கக் கோரியும் மேலைப்பனையூா் விவசாயிகள் அங்குள்ள ஓஎன்ஜிசி அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.

விவசாயி ஆா். சரவணன் தலைமையில் நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்றவா்கள் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு எதிராக கோஷமிட்டனா். அங்குவந்த திருத்துறைப்பூண்டி துணைக் காவல் கண்காணிப்பாளா் சோமசுந்தரம், இப்பிரச்னை தொடா்பாக மன்னாா்குடி வட்டாட்சியா் தலைமையில் சனிக்கிழமை (மாா்ச் 12) ஓஎன்ஜிசி அலுவலா்கள் மற்றும் விவசாயிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய தீா்வு காணப்படும் என உறுதி அளித்ததன் பேரில், விவசாயிகள் முற்றுகையை விலக்கிக் கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.