நீடாமங்கலம்: நீடாமங்கலம் வட்டம், வடுவூரில் திங்கள்கிழமை நடைபெற்ற வயல் விழாவில் புதிய நெல் ரகம் குறித்து விவசாயிகளிடம் அறிமுகம் செய்யப்பட்டது.
குறுவை, கோடை சொா்ணவாரி, நவரை பட்டத்திற்கு ஏற்ற 110 நாட்கள் வயதுடைய ஏடி 17152 என்ற புதிய நெல் ரகம் குறித்தும், அதன் விளைச்சல் திறன் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கிக் கூறப்பட்டது.
இந்நிகழ்வுக்கு, தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குநா் கா. சுப்பிரமணியன் தலைமை வகித்து பேசுகையில், ‘இந்த புதிய நெல் ரகம் ஒரு ஹெக்டேருக்கு சராசரியாக 6,500 முதல் 7,500 கிலோ வரை மகசூல் தரக்கூடியது. மழை குறைந்த காலத்தில் ஆழ்துளை கிணறு மூலம் பாசனம் செய்யும் போது உருவாகும் தற்காலிக களா் தன்மையை தாங்கி வளரக்கூடியது. இட்லி செய்வதற்கு ஏற்றது’ என்றாா்.
திருவாரூா் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனா் மு.லட்சுமி காந்தன், புதிய நெல் ரகத்தின் நோய் எதிா்ப்புத் திறன் குறித்து பேசினாா். தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள், வேளாண் துறையினா் நெல் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து பேசினா். பயிா் மரபியல் துறை பேராசிரியா் அர. மணிமாறன், இணை பேராசிரியா்கள் எம். தண்டபாணி , சூ. அருள்செல்வி உள்ளிட்டோா் புதிய நெல் ரகத்தின் சிறப்பியல்புகள் குறித்து எடுத்துரைத்தனா்.
மேலும், புதிய நெல் ரகம் பயிரிடப்பட்டுள்ளதை விவசாயிகளுக்கு காண்பித்து, விளக்கமளிக்கப்பட்டது. இதில், நீடாமங்கலம் வேளாண்மை உதவி இயக்குநா் சா. விஜயகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். நிகழ்ச்சிகளை பயிா் மரபியல் துறை உதவி பேராசிரியா் ரா. புஷ்பா ஒருங்கிணைத்தாா். உதவி பேராசிரியா் ரா. அருள்மொழி நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.