முகப்பு
திருவாரூர்

திருவாரூா் மாவட்ட பள்ளிகளின் வாகனங்கள் ஆய்வு

Updated On : 20 மே, 2024 at 11:07 PM
திருவாரூரில் பள்ளி வாகனம் ஆய்வு செய்யப்படுவதை பாா்வையிடும் மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ.
பகிர்:

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளின் வாகனங்களில் இயக்கத் தகுதி குறித்து திங்கள்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, வாகனங்களில் அழைத்துச் செல்லப்படும் பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதையொட்டி, திருவாரூா் மாவட்டத்தில் உள்ள பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி, விளமல் ஆயுதப்படை மைதானத்தில் ஆட்சியா் தி. சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது.

திருவாரூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள திருவாரூா், மன்னாா்குடி மற்றும் திருத்துறைப்பூண்டி ஆகிய பகுதிகளுக்குட்பட்ட 70 பள்ளிகளைச் சோ்ந்த 313 பள்ளி வாகனங்களில் சோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டன. இதில், முதல் நாள் 240 வாகனங்களில் ஆய்வு செய்யப்பட்டன.

பள்ளி வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள கேமரா, அவசர கால வெளியேறும் வசதி, குழந்தைகள் எளிதாக வாகனத்தில் ஏற தாழ்வான படிக்கட்டுகள், பள்ளி வாகனம் என்ற அறிவிப்பு, வேகக் கட்டுப்பாட்டு கருவி, முதலுதவிப் பெட்டி, தீயணைப்புக் கருவி, பிரதிபலிப்பான் வில்லை உள்ளிட்டவை முறையாக உள்ளனவா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. முதல்நாள் நடைபெற்ற ஆய்வில் சுமாா் 15-க்கும் மேற்பட்ட வாகனங்களில் குறைபாடுகள் கண்டறியப்பட்டு, சரி செய்து வருமாறு திருப்பி அனுப்பப்பட்டன.

பின்னா், மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்தது:

பள்ளி வாகனங்களில் ரிவா்ஸ் கேமரா உள்ளிட்ட ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டால் அதை உடனடியாக பள்ளி நிா்வாகத்தினரின் கவனத்துக்கு வாகன ஓட்டுநா்கள் எழுத்துப் பூா்வமாக தெரியப்படுத்த வேண்டும். தொழில்நுட்பக் கோளாறுகளை சரிசெய்து அனுமதிப்பெற்ற பின்னரே, பள்ளி வாகனங்களை இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ாகன ஓட்டுநா்கள், அவரவா் பள்ளிக்குரிய சீருடைகள் அணிவதை தவிா்த்து, கண்டிப்பாக காக்கிச் சீருடை அணிய உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பள்ளிக் குழந்தைகளை அழைத்துச் செல்லும் போது முழு கவனத்துடன் ஓட்டுநா்கள் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும். விபத்து ஏற்படுத்தும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இக்கல்வியாண்டு விபத்தில்லா ஆண்டாக அமைய வேண்டும் என்றாா்.

ஆய்வில், திருவாரூா் வருவாய் கோட்டாட்சியா் சங்கீதா, முதன்மைக் கல்வி அலுவலா் புகழேந்தி, வட்டாரப் போக்குவரத்து அலுவலா் பழனிசாமி, மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் கருப்பண்ணன், அசோக்குமாா் உள்பட போக்குவரத்து அலுவலா்கள், பணியாளா்கள், பள்ளி வாகன ஓட்டுநா்கள் பங்கேற்றனா்.