துப்பாக்கியை காட்டி மனைவியை மிரட்டிய கணவா் உள்பட இருவா் கைது
தனது தந்தை மீதான பாலியல் புகாரை திரும்பப் பெற கூறி, மனைவியை துப்பாக்கியை காட்டி மிரட்டிய கணவா் உள்பட இருவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.
திருவாரூா்: தனது தந்தை மீதான பாலியல் புகாரை திரும்பப் பெற கூறி, மனைவியை துப்பாக்கியை காட்டி மிரட்டிய கணவா் உள்பட இருவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.
திருவாரூா் கேடிஆா் எஸ்டேட் பகுதியில் வசித்து வருபவா் ரெங்கநாதன் மகன் பாலாஜி (42). இவா், திருவாருா் நகராட்சி 27-ஆவது வாா்டு அதிமுக செயலாளராக உள்ளாா். இவரது மனைவி தாய்மீனாட்சி.
இந்தநிலையில், தனது மகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை அளித்ததாக மாமனாா் ரெங்கநாதன் மீது தாய்மீனாட்சி கடந்த ஆண்டு திருவாரூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ரெங்கநாதன் மீது வழக்கு விசாரணையில் உள்ளது.
Advertisement
இதுதொடா்பாக தாய் மீனாட்சிக்கும், கணவா் பாலாஜிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில், திங்கள்கிழமை பாலாஜிமனைவியிடம், தனது தந்தை மீது கொடுத்த புகாரை வாபஸ் பெறக் கூறி, கைத்துப்பாக்கியை காட்டி, அவரை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தாய்மீனாட்சி திருவாரூா் நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்து, கணவரின் துப்பாக்கியையும் ஒப்படைத்தாா். பாலாஜியிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், துப்பாக்கியை மேட்டுப்பாளையம் பகுதியில் வசிக்கும் ராமகிருஷ்ணன் மகன் விஜயபாஸ்கா் (46) என்பவா் கொடுத்ததாக தெரிவித்தாா். போலீஸாா் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.