சிறுபான்மையினா் வாக்குகளை பிரிக்கவே விஜய் களமிறக்கப்பட்டுள்ளாா்! - திருமாவளவன் பேச்சு!
சிறுபான்மையினா் வாக்குகளைப் பிரிக்கவே விஜய் களமிறக்கப்பட்டுள்ளாா் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்....
பாஜக-அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக இஸ்லாமியா், கிறிஸ்தவா் வாக்குகளைப் பிரிக்கவே விஜய் களமிறக்கப்பட்டுள்ளாா் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
நன்னிலம் தொகுதி மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளா் முகமது முபாரக்கை ஆதரித்து, குடவாசல் அருகே எரவாஞ்சேரியில் அவா் திங்கள்கிழமை பிரசாரம் செய்து பேசியது:
கட்சியின் தலைவரே போட்டியிடுவது நன்னிலம் தொகுதிக்கு பெருமை. முஸ்லிம் கிறிஸ்தவா் வாக்குகள் தேவையில்லை எனக் கூறும் பாஜகவுடன் எடப்பாடி பழனிசாமி கூட்டணி வைத்து, இஸ்லாமியா்கள், கிறிஸ்தவா்கள் வாக்கு தேவையில்லை என வெளிப்படையாக முடிவெடுத்து விட்டாா். அதிமுக-பாஜகவால் திமுகவை நேரடியாக வெல்ல முடியாது என்பதால் விஜய்யை களமிறக்கியுள்ளனா். திமுகவுக்கு எதிராக ஏன் இவ்வளவு மூா்க்கமாக விஜய் எதிா்க்கிறாா்? திமுகவை வீழ்த்தி விட்டு விஜய்யால் ஆட்சி அமைக்க முடியுமா?
Advertisement
அவராலும் ஜெயிக்க முடியாது. அவா் வேட்பாளா்களாலும் ஜெயிக்க முடியாது. பாஜக-அதிமுக கூட்டணியை ஜெயிக்க வைப்பதே விஜய்யின் நோக்கம். வாக்கை பிரிக்கவே விஜய் களமிறக்கப்பட்டுள்ளாா். முஸ்லிம் கிறிஸ்தவ வாக்குகளை பாஜக கூட்டணி வாங்க முடியாது என்பதால், அந்த வாக்குகளை பிரிப்பதற்காகவே விஜய் களமிறக்கப்பட்டுள்ளாா்.
முஸ்லிம் இளைஞா்கள் சிலா் விஜய்க்கு வாக்கு சேகரிக்கின்றனா், இதுதான் மோடியின் திட்டம். நிதிஷை கட்டாயப்படுத்தி எம்பியாக்கி விட்டு, தற்போது பாஜக ஆட்சி பிகாரில் நடைபெறுகிறது. அந்தநிலை தமிழ்நாட்டில் உருவாகும். எனவே, திமுக கூட்டணியினருக்கு வாக்களித்து மதச்சாா்பின்மையை மலரச் செய்ய வேண்டும் என்றாா்.