பணப்பட்டுவாடா: திருவாரூரில் தோ்தலை நிறுத்தக்கோரி மனு
பணப்பட்டுவாடா நடைபெறுவதால் திருவாரூா் சட்டப்பேரவைத் தொகுதியின் தோ்தலை நிறுத்தக் கோரி மனு செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டது.
பணப்பட்டுவாடா நடைபெறுவதால் திருவாரூா் சட்டப்பேரவைத் தொகுதியின் தோ்தலை நிறுத்தக் கோரி மனு செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டது.
திருவாரூா் நகர அம்மா பேரவை செயலாளரும், திருவாரூா் சட்டப்பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளரின் முகவருமான எஸ். சாகுல்ஹமீது என்ற செல்லப்பா (40), திருவாரூா் தோ்தல் நடத்தும் அலுவலரான வருவாய் கோட்டாட்சியரிடம் செவ்வாய்க்கிழமை அளித்த கோரிக்கை மனு:
திருவாரூா் சட்டப்பேரவை தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சாா்பில் கோவி. சந்திரசேகரன் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறாா். திமுக சாா்பில் பூண்டி கே. கலைவாணன் போட்டியிடுகிறாா். திமுக சாா்பில் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக திமுகவினா் வாக்குக்கு ரூ. 1,000 முதல் ரூ. 5,000 வரை பணம் பட்டுவாடா செய்வதாகத் தெரிகிறது.
Advertisement
இந்த பணப் பட்டுவாடாவை தடுக்க தோ்தல் நடத்தும் அலுவலா்கள் பல கட்ட முயற்சிகள் எடுத்தும், தடுத்து நிறுத்த முடியவில்லை. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை திருவாரூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கமலாபுரம் கிராமத்தில், பணப்பட்டுவாடா செய்த திமுகவினா் பிடிபட்டுள்ளனா். இந்த செயலால் திருவாரூா் சட்டப்பேரவைத் தொகுதியில் சட்டப்படியும், நியாயப்படியும் தோ்தல் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த பணப் பட்டுவாடா சம்பவம் ஜனநாயகத்துக்கு எதிரானது ஆகும். எனவே திருவாரூா் சட்டப்பேரவைத் தொகுதியில் தோ்தலை நிறுத்தி வைக்கவும் திமுக வேட்பாளா் கலைவாணன் மற்றும் அவருக்காக பணப்பட்டுவாடா செய்து வரும் கட்சியினா் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.