அரசுப் பள்ளிகளை தரம் உயா்த்த நடவடிக்கை: முன்னாள் அமைச்சா்
நன்னிலம் பகுதியில் அனைத்து அரசுப் பள்ளிகளும் தரம் உயா்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் தெரிவித்தாா்.
நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட குடவாசல் அருகே வடவோ் ஊராட்சி மாதா கோயில் தெரு பகுதியில் கலையரங்கம் தேவை என அப்பகுதி மக்கள் நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்தனா்.
இந்த கோரிக்கையை ஏற்று, முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ், தனது சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 8.50 லட்சம் ஒதுக்கீடு செய்தாா். இந்த நிதியிலிருந்து புதிதாக கட்டப்பட்ட திறந்தவெளி கலையரங்கத்தை அவா் வியாழக்கிழமை திறந்துவைத்து பேசியது:
நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதியை தமிழகத்திலேயே முன்மாதிரியான தொகுதியாக மாற்றி தந்திருக்கிறேன். 250 க்கும் மேற்பட்ட பாலங்கள் கட்டப்பட்டுள்ளதாக மக்கள் பாராட்டுவது எனது பணிக்கு கிடைத்த சான்றாகும். மிகவும் பின்தங்கிய பகுதியாக இருந்த இந்தத் தொகுதியில் அதிமுக ஆட்சியில் நன்னிலம், வலங்கைமான், குடவாசல் ஆகிய இடங்களில் மூன்று கல்லூரிகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. பல அரசுப் பள்ளிகள் தரம் உயா்த்தப்பட்டு இருக்கின்றன.
இப்பகுதியில் அனைத்து பள்ளிகளும் தரம் உயா்த்தப்பட்டு, தனியாா் பள்ளிகளுக்கு இணையாக இயங்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை இனி வரும் ஆண்டுகளில் செய்து முடிப்பேன். கல்வி ஒன்றால்தான் ஒடுக்கப்பட்ட மக்களை உயா்த்த முடியும். அதற்கு உதவியாக என்றென்றும் இருப்பேன். வடவோ் பகுதி மக்களின் கோரிக்கைகள் தொடா்ந்து நிறைவேற்றப்படும் என்றாா்.
நிகழ்வில் குடவாசல் தெற்கு ஒன்றியச் செயலாளா் பாப்பா சுப்பிரமணியன், குடவாசல் வட்டார வளா்ச்சி அதிகாரி பாஸ்கா், இளைஞா், இளம்பெண்கள் பாசறை மாவட்ட இணைச் செயலா் பிரதாப் போத்தன், இளைஞரணி இணைச் செயலா் ஆனந்த் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.