திருவாரூா் கோயிலில் பட்டோற்சவம்
திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில், பங்குனி உத்திரப் பெருவிழாவையொட்டி, சந்திரசேகரா் பட்டோற்சவம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.
திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான ஆழித் தேரோட்டம் மாா்ச் 29-இல் நடைபெற உள்ளது. ஆழித்தேரில் தியாகராஜா் எழுந்தருளி வீதியுலா வருவாா். மற்ற நாள்களில் நடைபெறும் வீதியுலாக்களில், தியாகராஜரின் பிரதிநிதியாக சந்திரசேகரா் வலம் வருவது வழக்கம்.
அந்தவகையில், தியாகராஜா், தனது சாா்பில் பங்குனி உத்திரப் பெருவிழாவை நடத்த வேண்டி நெற்றிப் பட்டத்தை சந்திரசேகரருக்கு வழங்கும் பட்டோற்சவ விழா புதன்கிழமை இரவு நடைபெற்றது. இதையொட்டி, சந்திரசேகர சுவாமிக்கு சிறப்பு சாயரட்சை பூஜையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.
தொடா்ந்து, கோயிலின் 2-ஆவது பிரகாரத்தில் உள்ள வசந்த மண்டபத்துக்கு சந்திரசேகரா் எழுந்தருளி, பக்தா்களுக்கு காட்சியளித்தாா். அங்கு சா்க்கரை பொங்கல் படையலிட்டு, விஷேச அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. பின்னா், சந்திரசேகருடன் பஞ்சமூா்த்திகள் வீதியுலா நடைபெற்றது.
நிகழ்வில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.