முகப்பு
புதுதில்லி

எம்.ஜி.ஆருக்காக என் பெயரில் மருந்து வாங்கினேன்: முன்னாள் தூதரக அதிகாரி ஜி.சங்கரநாராயணன்

தமிழக மக்கள் மனத்தில் அழுத்தமாகப் பதிந்த பெயர் எம்.ஜி.ஆர். அவர் மறைந்தாலும் அவரைப் பற்றிய நினைவுகள் இன்னும் பலருடைய மனதில் இருந்து மறையவில்லை. எம்.ஜி.ஆருடன் நேரடியாகப் பழகியவர்கள் அவருடனான தங்களுடைய அ

Updated On : 28 டிசம்பர், 2023 at 7:09 PM
பகிர்:

தமிழக மக்கள் மனத்தில் அழுத்தமாகப் பதிந்த பெயர் எம்.ஜி.ஆர். அவர் மறைந்தாலும் அவரைப் பற்றிய நினைவுகள் இன்னும் பலருடைய மனதில் இருந்து மறையவில்லை. எம்.ஜி.ஆருடன் நேரடியாகப் பழகியவர்கள் அவருடனான தங்களுடைய அனுபவங்களை மனதுக்குள் அசைபோட்டு மகிழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

 தமிழக மக்கள் மட்டுமின்றி பிற மாநிலத்தவரின் இதயத்திலும் நீங்காத இடம் பெற்றவர் அவர். இதற்கு தில்லி மயூர்விஹார் ஃபேஸ் 1 பகுதியில் வசிக்கும் ஜி.எஸ். ஐயரின் அனுபவமும் ஒரு சான்று.

 வெளிநாடுகளில் இந்தியத் தூதராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர் ஜி. சங்கரநாராயணன் என்கிற ஜி.எஸ். ஐயர். அவர் எம்.ஜி.ஆருக்காகத் தானே நோயாளியாக ஒரு மருத்துவமனையில் பெயரைப் பதிவு செய்த ஒரு சம்பவத்தை நினைவுகூர்ந்தது நெஞ்சை நெகிழவைத்தது.

 ""எனது மூதாதையர் தமிழகம் - கேரளத்தை ஒட்டிய திருவிதாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் நாங்கள் வேரூன்றியது திருவனந்தபுரத்தில்தான்.

 நான் 1965-ம் ஆண்டு ஐ.எஃப்.எஸ். தேர்வு எழுதினேன். பணிவாய்ப்புப் பெற்று சீனாவில் உள்ள இந்தியத் தூதரக அலுவலகத்தில் சேர்ந்தேன். அதற்குப் பிறகு, 1982 முதல் 1986-ம் ஆண்டு வரை ஜப்பான் டோக்கியோவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் இந்தியத் தூதருக்கு அடுத்த நிலையில் பணியாற்றிக் கொண்டிருந்தேன்.

 1984-ம் ஆண்டு. தமிழக முதல்வராக எம்.ஜி.ஆர். அப்போது இருந்தார். அவருடைய மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் திடீரென அடைப்பு ஏற்பட்டு அவர் உடல் நலம் குன்றியிருந்தார்.

 அப்போது, சென்னையில் இருந்து ஜப்பானில் உள்ள எங்கள் தூதரக அலுவலகத்தைத் தமிழக அரசு அதிகாரிகள் தொடர்பு கொண்டனர். எம்.ஜி.ஆருக்குச் சிகிச்சை அளிப்பதற்காக ஜப்பான் நாட்டின் மருத்துவ நிபுணர் கானோ சென்னை வரப் போவதாகவும், அவரை அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து தருமாறும் அவர்கள் எங்களைக் கேட்டுக் கொண்டனர்.

 நாங்கள் உடனடியாக கானோ இருக்குமிடத்தைக் கண்டுபிடித்தோம். அவர் அப்போது அமெரிக்காவுக்குச் சென்றுவிட்டு டோக்கியோவுக்கு விமானத்தில் திரும்பிக் கொண்டிருந்தார். இந்தத் தகவலை உடனடியாகச் சென்னையில் உள்ள அதிகாரிகளிடம் தெரிவித்தோம்.

 எம்.ஜி.ஆருக்கு டாக்டர் கானோ வந்துதான் சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை. எனவே அவரை விரைவில் அனுப்பி வைக்குமாறு தொடர்ந்து தொலைபேசியில் கேட்டுக் கொண்டே இருந்தனர்.

 ஜப்பானில் இருந்து இந்தியாவுக்கு அப்போது நேரடி விமான சேவை இல்லை. சிங்கப்பூர் சென்று அங்கிருந்துதான் இந்தியாவுக்கு விமானத்தில் செல்ல வேண்டும். சிங்கப்பூருக்குச் செல்லும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் டோக்கியோவில் இருந்து புறப்படுவதற்குத் தயாராகிக் கொண்டிருந்தது. ஆனால் அமெரிக்காவில் இருந்து கானோ வந்து கொண்டிருந்த விமானம் சில மணிநேரம் தாமதமாக வந்து கொண்டிருந்தது. என்ன செய்வது? என்று பதறிக் கொண்டு இருந்தோம்.

 எப்படியாவது கானோவை சிங்கப்பூர் செல்லும் அந்த விமானத்தில் ஏற்றி அனுப்பிவிட வேண்டும் என்பதற்காக சிங்கப்பூரில் உள்ள இந்தியத் தூதரை தொடர்பு கொண்டோம். அவர் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத் தலைவரைத் தொடர்பு கொண்டு சில மணித் துளிகள் விமானம் தாமதமாகப் புறப்படுவதற்கு ஏற்பாடு செய்தார். அமெரிக்காவிலிருந்து வந்து கொண்டிருந்த டாக்டர் கானோவை அந்த விமானத்தில் அனுப்பி வைத்த பின்புதான் எங்களுக்கு உயிர் வந்தது.

 சிங்கப்பூரில் விமானம் தரையிறங்கியதும், உடனே அங்கே தயாராக இருந்த சிறப்பு விமானம் மூலம் கானோ சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

 சென்னைக்கு வந்து எம்.ஜி.ஆரைப் பரிசோதித்த டாக்டர் கானோ, அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஒருவகை "சலைன்' மருந்தைப் பரிந்துரைத்தார். அந்த மருந்து ஜப்பானில் மட்டுமே கிடைக்கும். எனவே ஜப்பானிலிருந்து உடனடியாக வாங்கி அனுப்புமாறு கூறினார்கள். மருந்தகங்களில் அந்த மருந்தைக் கேட்டபோது "டாக்டரின் மருந்துச் சீட்டு இல்லாமல் எப்படித் தருவது' என்று கூறிவிட்டனர். பல கடைகளில் ஏறி இறங்கியும் கேட்டும் இதே பதில்தான் கிடைத்தது. கடைசியாக ஒரு மருத்துவமனைக்கு நானே நேரில் சென்று கேட்டேன். அங்குள்ள மருத்துவர், ""வேறொரு நாட்டில் இருக்கும் நோயாளி ஒருவருக்கு இங்கே எப்படி மருந்து தருவது?' என்று என்னிடம் திருப்பிக் கேட்டார். அவரிடம் எம்.ஜி.ஆரைப் பற்றி விரிவாக எடுத்துக் கூறினேன்.

 அதற்கு அவர், ""சரி மருந்து தருகிறேன். ஆனால், அதை யாராவது ஒரு நோயாளியின் பெயரிலேதான் தர முடியும்?'' என்றார்.

 ""சரி, அந்த நோயாளியாக எனது பெயரைப் போட்டுக் கொள்ளுங்கள்'' என்று நான் கேட்டுக் கொண்டேன். எம்.ஜி.ஆருக்காக எனது பெயரில் மருந்து தரப்பட்டது. இந்த நிகழ்ச்சியை என்னால் மறக்கவே முடியாது.

 அதற்குப் பிறகு, சில மாதங்கள் கழித்து, ஜப்பானுக்கு எம்.ஜி.ஆர். வந்தார். அவருடன் ஜானகி ராமச்சந்திரன், பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோரும் வந்திருந்தனர். அவர்கள் எங்கள் வீட்டுக்கும் வந்தனர். அப்போது யானை பொம்மை ஒன்றைப் பரிசாக எம்.ஜி.ஆர். எனக்கு வழங்கினார். அப்போது நாங்கள் அடைந்த மகிழ்ச்சியை விவரிக்க சொற்கள் இல்லை.

 ஆனால், அதற்கு அடுத்த ஆண்டில் அவர் மறைந்துவிட்டார். அது எனக்கும் குடும்பத்தாருக்கும் மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியது. இப்போது நினைத்தாலும் இதயம் கனக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.