பிரதமர் இல்லத்தை முற்றுகையிட முயன்ற பாஜக தொண்டர்கள் கைது
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி பாஜக இளைஞர் அணியினர் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி பாஜக இளைஞர் அணியினர் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரதமர் இல்லம் உள்ள ரேஸ் கோர்ஸ் சாலைக்குள் தடையை மீறி செல்ல முயன்ற அவர்களை போலீஸார் கைது செய்தனர்.
ரயில்வே வாரிய உறுப்பினர் பணி நியமனத்தில் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானதால் ரயில்வே அமைச்சர் பதவியை பவன் குமார் பன்சாலும், நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் சிபிஐ தயாரித்த அறிக்கையைத் திருத்திய புகாரில் மத்திய சட்ட அமைச்சர் அஸ்வனி குமாரும் பதவியை ராஜிநாமா செய்தனர்.
Advertisement
Advertisement
அதையடுத்து, பிரதமர் பதவி விலக வேண்டும் என்று பாஜக கூறியது. அதை வலியுறுத்தி, கட்சியின் இளைஞர் அணித் தலைவர் அனுராக் தாகுர் தலைமையில் நூற்றுக்கணக்கான பாஜகவினர் ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணியளவில் ரேஸ் கோர்ஸ்-துக்ளக் சாலை சந்திப்பில் திரண்டனர்.
"நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு முறைகேடு விவகாரத்தில் பிரதமர் ராஜிநாமா செய்ய வேண்டும்' என்று அவர்கள் கோஷமிட்டனர்.
அப்போது, தடுப்புகள் மீது ஏறி ரேஸ் கோர்ஸ் சாலைக்குள் நுழைய அவர்கள் முற்பட்டனர்.
அதையடுத்து, "வஜ்ரா' வாகனங்கள் மூலம் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும், தடியடி நடத்தியும் அவர்களைக் கலைக்க போலீஸார் முயற்சித்தனர்.
அதையும் மீறி, போராட்டக் குழுவில் இருந்த சிலர், மன்மோகன் சிங்கின் உருவ பொம்மையை அந்தப் பகுதியிலேயே கொளுத்தினர்.
அதையடுத்து, அகில இந்திய பாஜக இளைஞர் அணித் தலைவர் அனுராக் தாகுர், பொதுச் செயலாளர் நிதின் நவீன், செயலாளர் தோனி சர்மா, தில்லி பாஜக தலைவர் விஜய் கோயல், தில்லி பாஜக இளைஞர் அணித் தலைவர் நகுல் பரத்வாஜ் உள்பட 500-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர். பிற்பகலில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.