தில்லியின் ஒரு சில பகுதிகளில் சனிக்கிழமை மிதமான மழை பெய்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு 90 சதவீதமாக அதிகரித்ததால், புழுக்கம் தாங்காமல் மக்கள் அவதிக்குள்ளாகினர்.
இதுதொடர்பாக வானிலை மைய அதிகாரி கூறியதாவது:
தில்லியில் சனிக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 32.8 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸாகவும் பதிவானது. காலை 8 மணி முதல் மாலை 5.30 மணி வரையில் நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை (0.8மி.மீ) பெய்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு, 90 சதவீதம் வரை அதிகரித்தது. இதனால், புழுக்கம் தாங்காமல் மக்கள் அவதிப்பட்டனர்.
நகரில் ஞாயிற்றுக்கிழமை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இடி, மின்னலுடன் கூடிய மழைக்கும் வாய்ப்புள்ளது. அதேபோல், அதிகபட்ச, குறைந்தபட்ச வெப்பநிலைகள் முறையே 32, 27 டிகிரிகளாக பதிவாகலாம் என்றார் அந்த அதிகாரி.
தில்லியில் கடந்த வெள்ளிக்கிழமையன்று அதிகபட்ச வெப்பநிலை 36.8 டிகிரியாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரியாகவும் பதிவானது குறிப்பிடத்தக்கது.