தேசியத் தலைநகர் வலயப் பகுதியான காஜியாபாதில் சுமார் 500 பேரை ஏமாற்றி ரூ.2 கோடி மோசடி செய்ததாக 10 மந்திர வித்தைக்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து நகர காவல் கண்காணிப்பாளர் ஆகாஷ் தோமர் கூறியதாவது:
அனைத்து விதமான பிரச்னைகளுக்கும் தங்களிடம் தீர்வு இருப்பதாகக் கூறி அவர்கள் முதலில் விளம்பரம் கொடுத்து மக்களை தங்கள் பக்கம் ஈர்த்துள்ளனர். தங்களைத் தேடி வருவோரிடம் மந்திர வித்தைகள் மூலம் அவற்றை தீர்ப்பதாகக் கூறி பணம் பறித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் அர்தலா கிராமத்தில் கால் சென்டர் ஒன்றை நடத்தி வந்துள்ளனர். அவர்களில் இருவர் விளம்பர நிறுவனங்களின் உரிமையாளர்களாவர். இந்நிலையில், மிதுன் சிங் என்பவர் கடந்த 15-ஆம் தேதி ஷாஹிபாபாத் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று ஆகாஷ் தோமர் கூறினார்.