தில்லி சுகாதாரத் திட்டம்: முதல்வர் கேஜரிவால் ஆய்வு
தில்லி சுகாதாரத் திட்டத்தின் (டிஎஸ்எச்எம்) செயல்பாடுகள் குறித்து முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வியாழக்கிழமை மீளாய்வு மேற்கொண்டார்.
தில்லி சுகாதாரத் திட்டத்தின் (டிஎஸ்எச்எம்) செயல்பாடுகள் குறித்து முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வியாழக்கிழமை மீளாய்வு மேற்கொண்டார்.
முதல்வர் கேஜரிவால் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தில்லி அரசின் சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், சமூக நலத் துறை அமைச்சர் ராஜேந்தர் பால் கௌதம், தலைமைச் செயலர் எம்.எம். குட்டி மற்றும் தில்லி அரசு, மாநகராட்சிகளின் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் தில்லி அரசின் சுகாதார திட்டத்தின் செயல்பாடுகள் குறித்த விவரங்கள் முதல்வரின் பார்வைக்கு சமர்ப்பிக்கப்பட்டது.
கூட்டத்தின் போது, சுகாதாரப் பணிகளில் உள்ள ஊழியர்கள் பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில், மருத்துவமனைகளுக்கு குறுகிய காலத்திற்கு ஆள்களை நியமிக்க ரோகி கல்யாண் சமிதிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதன் மூலம் மருத்துவமனைகளில் போதிய பணியாளர்கள் இருப்பதற்கு உதவியாக அமையும்.
அனைவருக்கும் சுகாதார வசதிகள் கிடைக்கச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ள இத்திட்டத்தின் கீழ் தில்லியில் 1,000 ஆம் ஆத்மி மொஹல்லா கிளினிக்குகள் அமைக்கும் முன்மொழிவுக்கு தில்லி முதல்வர் கேஜரிவால் ஒப்புதல் அளித்துள்ளார்.
அனைவருக்கும் தரமான, வாங்கக் கூடிய விலையில் சுகாதார சேவைகள் கிடைப்பதை உறுதிப்படுத்துவதுதான் டிஎஸ்எச்எமின் நோக்கமாகும். குறிப்பாக ஆரம்ப சுகாதார வசதிகள் அனைவருக்கும் கிடைக்கச் செய்வது, குடிசைப் பகுதிகள், ஜே.ஜே. காலனிகள், மறுகுடியேற்ற காலனிகள், அங்கீகாரமற்ற காலனிகள், நகரமயமான கிராமங்கள் ஆகியவற்றில் வசிக்கும் நலிவுற்ற, வறுமையில் வாழும் மக்களின் சுகாதாரப் பிரச்னைகள் தீர்க்கப்படுவதை உறுதிப்படுதுவதாகவும் இத்திட்டம் உள்ளது.