முகப்பு
புதுதில்லி

வர்த்தகக் கண்காட்சியில் பார்வையாளர்களைக் கவர்ந்த சிஆர்பிஎஃப் அரங்கு!

தில்லி பிரகதி மைதானத்தில் நடைபெற்று வரும்  இந்திய சர்வதேச  வர்த்தகக் கண்காட்சியில்  மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) அமைத்துள்ளஅரங்கம் பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது.

Updated On : 20 நவம்பர், 2017 at 2:13 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 11:39 PM

தில்லி பிரகதி மைதானத்தில் நடைபெற்று வரும்  இந்திய சர்வதேச  வர்த்தகக் கண்காட்சியில்  மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) அமைத்துள்ளஅரங்கம் பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது.
இரு பகுதிகளை உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டுள்ள சிஆர்பிஎஃப் அரங்கில், வீரர்களின் தியாகங்களைப் பறைசாற்றுவது போல படை நடவடிக்கைகளின்போது வீர மரணம் அடைந்த வீரர்களின் சிலைகளும், உருவப் படங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 
மற்றொரு அரங்கில் சிஆர்பிஎஃப் படையின் பிரிவுகள் குறித்தும் அவர்கள் பயன்படுத்தும் ஆயுதங்கள் குறித்தும் பல்வேறு விஷயங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பாக சி.ஆர்.பி.எஃப். மூத்த அதிகாரி  ஒருவர் கூறுகையில், "சிஆர்பிஎஃப்  படைப் பிரிவின் செயல்பாடுகளை மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையிலும், வெளியில் பெரிதாக கவனம் பெறாமல் உள்ள எங்களது படைப் பிரிவுகளின் தியாகங்களைக் காட்சிப்படுத்தவும், இளைஞர்களை சிஆர்பிஎஃப் படைப் பிரிவில் இணைய ஊக்குவிக்கவும் இந்த அரங்கத்தை ஏற்பாடு செய்துள்ளோம்' என்றார்.
1939- ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சிஆர்பிஎஃப் படையில், 3 லட்சம் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.  
நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பில் இப்படை பெரும் பாங்காற்றி வருகிறது. 26 மாநிலங்களிலும், ஐக்கிய நாடுகள் சபையின் வெளிநாட்டு மிஷனிலும் சிஆர்பிஎஃப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளது.
"இதுவரை 353 தேச விரோத சக்திளைக் கொன்றுள்ளோம். 2,627 தேச விரோத சக்திகளை கைது செய்துள்ளதுடன், 2, 433 தேச விரோதிகளை சரணடைய வைத்துள்ளோம். 
நாட்டு மக்களைப் பாதுகாக்க இரவு பகலாக பணியாற்றி வருகிறோம்'  என்று பெருமையாகக் கூறுகிறார் சி.பி.ஆர்.எப். படை வீரர் நிரஞ்சன் தாஸ்.
சிபிஆர்எஃப் படைப் பிரிவுகளில் பெண்களும் முக்கிய பங்காற்றி வருகின்றனர். "சிஆர்பிஎஃப் தொடங்கப்பட்டதிலிருந்து வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர். அவர்களது தியாகங்களையும் காட்சிப்படுத்தியுள்ளோம்' என்கிறார் சிபிஆர்எப்  படையின் ஸ்வேதா.
சிஆர்பிஎஃப் -இல் அதி விரைவுப் படை  (ரேபிட் ஆக்ஸன் ஃபோர்ஸ் -ஆர்ஏஎஃப்) என்ற தனிப் பிரிவும் உள்ளது. இப்படையினரின் செயல்பாடுகளும் இந்த அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இது குறித்து உதவிக் கமாண்டோ கெளசல் செளத்ரி கூறுகையில், "நாட் டில் சட்டம், ஒழுங்கைப் பாதுகாப்பது எங்களது  பிரதானக் கடமையாகும்.  பாதிப்பில்லாத இலகு ரக ஆயுதங்களைப் பயன்படுத்தி  சட்டம், ஒழுங்கைக் பேணுகிறோம்.  தேர்தல் பாதுகாப்பு, மத, இனக் கலவரங்களைத் தடுப்பது ஆகியவையும் எங்களது பணிகளாகும். உள்நாட்டில் மிகப் பெரிய அளவில் இன, மதக் கலவரங்கள் நடைபெறாமல் இருப்பதில்  நாங்கள் பெரும் பாங்காற்றி வருகிறோம்' என்றார்.
நக்ஸல்களை ஒடுக்கும் "கோப்ரா' படை!
நாடு முழுவதும் நக்ஸல் தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்டது, சிஆர்பிஎஃப்-இன் சிறப்புப் படையான "கோப்ரா'. இப்படை வீரர்கள் அடர் காடுகளுக்குள் நக்ஸல்களுடன் போராடுவதில் திறமை பெற்றவர்கள். "கோப்ரா' படைப் பிரிவை ஆரம்பித்ததில் தமிழக ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமாருக்கும் முக்கியப் பங்குண்டு. 
இது குறித்து "கோப்ரா' உதவிக் கமாண்டர் அபிநவ் யாதவ் கூறுகையில், "மேற்கு வங்கத்தில் நக்சல் தீவிரவாதத்தை அடியோடு ஒழித்தோம்.  உணவு மற்றும் நீரைச் சுமந்து கொண்டு, ஆயிரக்கணக்கான மைல்கள் தூரம்  அடர் காட்டில் கால்நடையாக நடந்து கொரில்லா போராளிகளுடன் போராடுகிறோம். நாடு முழுவதும் 10 பட்டாலியன்களில் சுமார் 10,000 வீரர்கள் அடர் காடுகளுக்குள் போராடி வருகின்றனர்.  நக்ஸல் தீவிரவாதம், ஏனைய மாநிலங்களுக்குப் பரவாமல் தடுத்த பெருமை எங்களுக்கு உண்டு. வெற்றி அல்லது வீர மரணம்.  இதுதான் எங்கள் படைப் பிரிவின் தாரக மந்திரம். ஒவ்வொரு "கோப்ரா' படை வீரரும் சாகத் துணிந்தவராக உள்ளார். அதுதான் எங்கள் படையின் பெரும் பலம்' என்றார்.
"கோப்ரா' வீரர்கள் கொரில்லா போர் முறையில் கை தேர்ந்தவர்கள். அடர் காட்டுக்குள் ஒழிந்துள்ள கொரில்லா தீவிரவாதிகளுடன், கொரில்லா போர் முறை மூலம் மோதக் கூடியவர்கள்.  அவர்கள் பொறியியல் துறையிலும் வல்லவர்கள். வெடி பொருள்களைக் கண்டறியும் திறமை உடையவர்கள். காடுகளுக்குள் மாதக் கணக்கில்  தங்கக் கூடிய மன வலிமையையும், உடல் வலிமையையும் பெற்றுள்ளவர்கள். மேலும், தொழில் நுட்பங்களிலும் கைதேர்ந்தவர்கள்' என்று கோப்ரா படை வீரர்களின் சிறப்புகளைப் பட்டியலிடுகிறார் உயரதிகாரி ஒருவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.