பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி, பாஜகவின் தில்லி பிரிவு சார்பில் திங்கள்கிழமை பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. தில்லியில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் மத்திய அமைச்சர்கள், தலைவர்கள் பங்கேற்று நலத் திட்ட உதவிகளை வழங்கினர்.
பிரதமர் நரேந்திர மோடி தனது 68-ஆவது பிறந்த நாளை தனது மக்களவைத் தொகுதியான உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் திங்கள்கிழமை கொண்டாடினார். இதையொட்டி தலைநகரில் பாஜகவின் தில்லி பிரிவு சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன.
தில்லியில் பல்வேறு இடங்களில் பாஜக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் ஹர்ஷ் வர்தன், ஸ்மிருதி இரானி ஆகியோர் பங்கேற்று நலத் திட்ட உதவிகளை வழங்கினர்.
கீர்த்தி நகரில் திங்கள்கிழமை காலையில் நடைபெற்ற நிகழ்ச்சியை பாஜகவின் தில்லி தலைவர் மனோஜ் திவாரி, கட்சியின் மூத்த தலைவர் வினாய் சகஸ்ரபுத் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
விஸ்வாஸ் நகரில் பாஜக சார்பில் மருத்துவ முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா, கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதி பாஜக உறுப்பினர் மகேஷ் கிரி ஆகியோர் பங்கேற்று மருத்துவ முகாமைத் தொடங்கிவைத்தனர்.
அப்போது அமைச்சர் நட்டா பேசுகையில், "பிரதமர் மோடி தனது பிறந்த தினத்தை சேவை தினமாக கொண்டாடுகிறார். இதனால், இந்தத் தினம் சேவை தினமாகக் கொண்டாடப்படுகிறது' என்றார். மேலும், மருத்துவ முகாம் நடைபெற்ற இடத்துக்கு அருகில் ஜே.ஜே. காலனியில் நட்டா துப்புவுப் பணியிலும் ஈடுபட்டார். இதற்கிடையே, அமைச்சர் நட்டா வருகைக்கு சில நிமிடங்கள் முன்னதாக, மாநகராட்சி துப்புரவுத் தொழிலாளர்கள் நிலுவை ஊதியத்தை வழங்க வலியுறுத்தி அப்பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.