நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனங்களான பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனங்களுக்கு கூடுதல் மூலதனம் வழங்குவது குறித்து மத்திய அரசு விரைவில் முடிவெடுக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
பொதுத்துறை வங்கிகளுக்கு மத்திய அரசு கூடுதல் மூலதனம் அளித்துள்ள நிலையில், அடுத்ததாக பொதுத் துறை தொலைத்தொடர்பு நிறுவனங்களை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
மத்திய அமைச்சரவைக் கூட்டம் விரைவில் நடைபெறவுள்ளது. இதில் கூடுதல் மூலதனம் தொடர்பாக முடிவெடுக்கப்பட வாய்ப்பு உள்ளது. அத்துடன் பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனங்களுக்கு 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாகவும் முக்கிய முடிவு அறிவிக்கப்படும் என்றும் தெரிகிறது.
இது தொடர்பாக சொலிசிட்டர் ஜெனரலிடம் சட்டரீதியான கருத்தையும் மத்திய அரசு ஏற்கெனவே பெற்றுள்ளது.
பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்கள் கடும் நிதி நெருக்கடியில் உள்ளன. இதனால், அதில் பணியாற்றும் 1.76 லட்சம் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கு கூட திண்டாடும் நிலை உள்ளது. கடந்த சில மாதங்களாக பிஎஸ்என்எல் நிறுவன ஊழியர்களுக்கு காலதாமதமாகவே சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.
ஏற்கெனவே பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்களுக்கு 50 சதவீதம் கூடுதல் மூலதனம் வழங்க மத்திய அரசு உத்தேசித்திருந்தது.
இப்போது, அதனை 100 சதவீதமாக அதிகரிக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாகத் தெரிகிறது. 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு பெற ரூ.20,000 கோடி வரை தேவைப்படும் என்று தெரிகிறது. இதனைப் பெறும் நோக்கத்திலும் கூடுதல் மூலதனம் அளிக்கப்படுகிறது.