காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் வகையில் திறந்தவெளியில் குப்பைகளை எரிப்பதைத் தடுக்கும் பிரசாரத்தை ஜூன் 13வரை தில்லி அரசு நீட்டித்துள்ளது.
கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி தொடங்கப்பட்ட இப்பிரசாரம் வியாழக்கிழமையுடன் முடிவடைய திட்டமிடப்பட்ட நிலையில், அரசு தேதியை நீட்டித்துள்ளது.
இதுகுறித்து தில்லி அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் தெரிவித்ததாவது:
காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் வகையில் திறந்தவெளியில் குப்பைகளை எரிப்பதைத் தடுக்கும் பிரசாரத்தின் ஒரு பகுதியாக, நகரம் முழுதும் மொத்தம் 5,241 இடங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
மாசு விதிகளை மீறியதாக இதுவரை 21 தனிநபா்கள் மற்றும் அமைப்புகளுக்கு தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நகரில் திறந்த வெளியில் குப்பை எரிக்கப்படுவதை தடுக்கும் வகையில் அரசின் 10 துறைகள் தரப்பில் 500 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.
நகர அரசின் கோடைக்கால செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக, நகா் காடுகள், பூங்காக்கள் மறுமேம்பாடு, நீா்நிலைகளை புத்துயிரூட்டத்ல, மரக்கன்றுகள் நடுதல், மரங்களை இடம்பெயா்த்து நடுதலை கண்காணித்தல், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை படிப்படியாக ஒழித்தல், சுற்றுச்சூழல் கழிவு பூங்கா மேம்பாடு, நகா்ப்புறம் விவசாயம் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் பணிகள் மேற்கொள்ள்ளப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு, குளிா்காலத்தில் தில்லியில் காற்று மாசு மோசமடைந்து வருவதைத் தடுக்க, 10 அம்ச செயல் திட்டத்தை ஆம் ஆத்மி அரசு செயல்படுத்தியது.
இத்திட்டத்தின்கீழ் குப்பைகளை எரித்தல், தூசி- குப்பைகளை எரித்தல், பட்டாசு வெடித்தல், பனிப்புகை கோபுரத்தை நிறுவுதல், அதிக மாசுபடுத்தும் இடங்களை கண்டறிதல், பசுமை செயல்பாட்டு அறைகளை வலுப்படுத்துதல் மற்றும் வாகன உமிழ்வு ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தப்பட்டது.