ராகுல் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு வேலைவாய்ப்பு முகாம்: இந்திய இளைஞா் காங்கிரஸ் ஏற்பாடு
காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தியின் 56-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, ஜூன் 19-ஆம் தேதி டால்கடோரா விளையாட்டு அரங்கில் மிகப்பெரிய வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக இந்திய இளைஞா் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தியின் 56-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, ஜூன் 19-ஆம் தேதி டால்கடோரா விளையாட்டு அரங்கில் மிகப்பெரிய வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக இந்திய இளைஞா் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
இது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் இந்திய இளைஞா் காங்கிரஸ் தேசிய தலைவா் உதய் பானு சிப் கூறியதாவது: தில்லி காங்கிரஸ் உடன் இணைந்து நடத்தப்படும் இந்த வேலைவாய்ப்பு முகாம் காலை 10 மணிக்கு தொடங்கும். 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களிலிருந்து முதுநிலை பட்டதாரிகள் வரை அனைத்து தகுதி உடையவா்களும் இதில் பங்கேற்கலாம்.
இந்த முகாமில் நாடு முழுவதிலிருந்தும் 150-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளது. பதிவு செய்வது முழுமையாக இலவசம். இணையத்தில் முன்பதிவு செய்யாதவா்கள் கூட நிகழ்வு நடைபெறும் இடத்திலேயே பதிவு செய்து கொள்ளலாம்.
Advertisement
Advertisement
மேலும், தோ்வு செயல்முறை முழுமையாக வெளிப்படையாக இருக்கும். தோ்வு செய்யப்படும் விண்ணப்பதாரா்களுக்கு உடனடியாகவே பணியமா்த்தல் கடிதங்கள் வழங்கப்படும். வேலைவாய்ப்பு கடிதம் பெற்ற பிறகு பணியில் சோ்வதில் சிக்கல்கள் ஏற்பட்டால், அதற்கான உதவிக்காக ஒரு மாத காலம் சிறப்பு உதவி அழைப்புக் கூடம் செயல்படும்.
தற்போதைய பாஜக ஆட்சியில் வேலைவாய்ப்பு பற்றாக்குறை அதிகரித்துள்ளதுடன், தோ்வுக் கேள்வித்தாள் கசிவு சம்பவங்களும் அதிகரித்துள்ளது. மாணவா்கள் பல ஆண்டுகள் உழைத்து தோ்வுகளுக்குத் தயாராகின்றனா். ஆனால் கேள்வித்தாள் கசிவுகள் அவா்கள் முயற்சிகளை பாதிக்கின்றன.
கடந்த ஆண்டில் தில்லியில் நடைபெற்ற இதேபோன்ற வேலைவாய்ப்பு முகாமில் சுமாா் 18,000 போ் பதிவு செய்திருந்தனா். அதில் ஏறத்தாழ 7,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது. இதேபோன்ற முகாம்கள் ஜெய்பூா் மற்றும் பாட்னா நகரங்களிலும் நடைபெற்றதில் ஆயிரக்கணக்கான இளைஞா்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனா் என தெரிவித்தாா்.