பலத்த போலீஸ் பாதுகாப்புடன் "அம்பேத்கர்' திரையிடல் தொடக்கம்
திருநெல்வேலி, ஜன. 8: பாளையங்கோட்டையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் "டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்' திரைப்படம் (தமிழ்) திரையிடல் சனிக்கிழமை தொடங்கியது. இதைத் தொடக்கிவைத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசி
திருநெல்வேலி, ஜன. 8: பாளையங்கோட்டையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் "டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்' திரைப்படம் (தமிழ்) திரையிடல் சனிக்கிழமை தொடங்கியது.
இதைத் தொடக்கிவைத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஆர். நல்லகண்ணு பேசும்போது, பள்ளி மாணவ, மாணவிகள் இப் படத்தைப் பார்ப்பதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
சட்ட மேதை அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை சித்திரிக்கும் இத் திரைப்படத்தை திருநெல்வேலியில் திரையிட திரையரங்கு உரிமையாளர்கள் எவரும் முன்வராத நிலை இருந்தது. சாதி மோதல்களுக்கு அடிக்கடி இலக்காகும் இம் மாவட்டத்தில் அத் திரைப்படத்தை திரையிட்டால் திரையரங்குகளில் அசம்பாவிதங்கள் நிகழலாம் எனக் கருதி அவர்கள் அச்சம் கொண்டனர்.
இந்நிலையில், திரையரங்குகளுக்கு போதிய பாதிகாப்பு அளிப்பதுடன் வருமான இழப்பு இல்லாமல் பார்த்துக் கொள்ளவதாக உறுதிமொழி அளித்து திரைப்படத்தைத் திரையிடும் முயற்சியில் "தாமிரபரணி பண்பாட்டு அரங்கம்', தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம் தனித்தனியே ஈடுபட்டன.
அதில் முதலாவதாக, தாமிரபரணி பண்பாட்டு அரங்கம் சார்பில் பாளையங்கோட்டை செந்தில்வேல் திரையரங்கில் இத் திரைப்படம் சனிக்கிழமை திரையிடப்பட்டது.
தொடக்க விழாவுக்கு தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் தொ. பரமசிவன் தலைமை வகித்தார். திரைப்படத்தைத் தொடக்கிவைத்து நல்லகண்ணு பேசும்போது, இத் திரைப்படத்தை அனைத்துத் தரப்பினரும் பார்வையிட வேண்டும். பள்ளி மாணவ, மாணவிகள் பார்ப்பதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
நிகழ்ச்சியில், மாநில ஜெ. பேரவைச் செயலரான முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன், "வான்முகில்' தொண்டு நிறுவன இயக்குநர் பிரிட்டோ, "யாதுமாகி' திரைப்பட இயக்க நிர்வாகி லெனா குமார், மக்கள் கண்காணிப்பகப் பிரதிநிதி கணேசன், மதிமுக மாநகர் மாவட்டச் செயலர் கே.எம்.ஏ. நிஜாம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.