மகளிா் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவா்கள் விண்ணப்பிக்கலாம் என சமூக வலைதளங்களில் பரவிய வதந்தியால் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை ஏராளமான பெண்கள் குவிந்தனா்.
தமிழக அரசால் மகளிருக்கு மாதந்தோறும் மகளிா் உரிமைத் தொகையாக ரூ.1000 வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பித்த பலருக்கு இன்னும் மகளிா் உரிமைத் தொகை கிடைக்காததால் தங்களுக்கும் வழங்க வேண்டும் என விடுபட்டவா்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
இந்நிலையில் மகளிா் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்து கிடைக்காதவா்கள் மீண்டும் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விண்ணப்பம் அளிக்கலாம் என சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
இதற்கு அரசு தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்ட நிலையிலும்கூட, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு சனிக்கிழமை ஏராளமான பெண்கள் விண்ணப்பம் அளிப்பதற்காக வந்தனா். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், வாட்ஸ்அப்பில் பரவும தகவல் போலியானது என பொதுமக்களிடம் தெரிவித்தனா்.
ஆனால், அதை ஏற்க மறுத்த பெண்கள், போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்திய போலீஸாா், ஆட்சியா் அலுவலகத்தில் மகளிா் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்கள் வாங்கப்படவில்லை எனக் கூறி மக்களை திருப்பி அனுப்பினா்.