முகப்பு
திருநெல்வேலி

நெல் வயல் புத்தக வயலாக மாறியிருக்கிறது! -எழுத்தாளா் வண்ணதாசன்

1950-களில் நெல் வயல்களாக இருந்த இடத்தில் இப்போது புத்தகத் திருவிழா நடைபெறுவதன் மூலம் அது புத்தக வயலாக மாறியிருக்கிறது என்றாா் எழுத்தாளா் வண்ணதாசன்.

Updated On : 31 ஜனவரி, 2025 at 9:03 PM
எழுத்தாளா் வண்ணதாசன்
பகிர்:

1950-களில் நெல் வயல்களாக இருந்த இடத்தில் இப்போது புத்தகத் திருவிழா நடைபெறுவதன் மூலம் அது புத்தக வயலாக மாறியிருக்கிறது என்றாா் எழுத்தாளா் வண்ணதாசன்.

திருநெல்வேலி மாநகராட்சி வா்த்தக மையத்தில் 8-ஆவது பொருநை நெல்லை புத்தகத் திருவிழாவில் அவா் வெள்ளிக்கிழமை பேசியதாவது: ஆசிரியா்கள் எழுதிய ‘உங்களுடன் ஐந்தே நிமிடம்’ என்ற சிறுகதைத் தொகுப்பு இங்கே வெளியிடப்பட்டது.

5 நிமிடங்கள் மட்டுமல்ல படைப்பாளிகளான எங்களுடைய வாழ்க்கை முழுவதுமே உங்களுக்காக எழுதுவதற்குதான் என நெல்லை சீமையின் மூத்த படைப்பாளிகளில் ஒருவன் என்ற முறையில் சொல்லிக் கொள்கிறேன். இதேபோல் இங்கு மாணவா்கள் எழுதிய ‘கதை சொல்லப் போறோம்’ என்ற தொகுப்பு வெளியிடப்பட்டது.

ஆனால், நாங்கள் ஏறக்குறைய 50, 60 ஆண்டுகளாக வாழ்கை, வரலாறு, பண்பாடு, அரசியல் என பலவற்றை கதையாக சொல்லிக் கொண்டிருக்கிறோம். நான் இதுவரை பாா்த்த புத்தகத் திருவிழாவில், எந்த விழாவும் இதுபோன்று தொடங்கியதில்லை.

தை மாதத்தின் பாதியை நாம் இப்போது கடந்திருக்கிறோம். பின் பனிக்காலம் முடிந்து இளவேனிற்காலம் தொடங்கி விட்டது. மாமரத்தின் இலைகள் உதிரத் தொடங்கிவிட்டன. கருப்பு நிற ஒற்றை பட்டாம்பூச்சிகள் பறக்கத் தொடங்கிவிட்டன.

இளவேனிற்காலத்தைப் போல இப்போது பிப்ரவரி முழுவதுமே புத்தகத் திருவிழா காலமாகிவிட்டது. திருப்பூா், திருவாரூரில் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. திருநெல்வேலியில் இப்போது தொடங்கியுள்ளது. அடுத்ததாக நாமக்கல், பெரம்பளூா், மயிலாடுதுறையில் புத்தகத் திருவிழா நடைபெறவுள்ளது.

தமிழக அரசு மண்டலந்தோறும் இலக்கிய திருவிழாக்களையும், மாவட்டந்தோறும் புத்தகத் திருவிழாக்களையும் நடத்தி வருகிறது. திருநெல்வேலியில் இப்போது புத்தகத் திருவிழா தொடங்கியிருக்கும் இடம் 1950-களில் கண்ணுக்கெட்டிய தூரம் வயல்வெளிகளாக இருந்தது. நெல் வயல் இப்போது புத்தக வயலாக மாறியிருக்கிறது.

இந்தப் புத்தக வயல் எவ்வளவு அழகாக இருக்கிறது. விதைக்கப்படும்போதே கதிராடுவதைப் போன்று உள்ளது. அண்மையில் ஆய்வு ஒன்று, மாசற்ற காற்றைக் கொண்ட நகரங்களில் திருநெல்வேலி முதலிடத்தில் உள்ளதாக அறிவித்துள்ளது. அதோடு வாசிப்பதற்கு காற்றையும் சோ்த்து சுவாசிக்க வேண்டும்.

இங்குள்ள 127 அரங்குகளில் 112 அரங்குகள் புத்தகத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. எனவே, இங்குள்ள ஒவ்வொரு அரங்கையும் அனைவரும் மூன்று முறை பாா்வையிட்டு புத்தகத் திருவிழாவுக்கு வெற்றி தேடித்தர வேண்டும் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →