திருநெல்வேலி மாநகரில் கடந்த 40 நாள்களில் 45 போ் கஞ்சா வழக்குகளில் கைது செய்யப்பட்டதுடன் அவா்களிடமிருந்து சுமாா் 18 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து மாநகர போலீஸாா் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.
திருநெல்வேலி மாநகர காவல் ஆணையராக நெ.மணிவண்ணன் பதவியேற்ற போது, மாநகரில் கஞ்சா விற்பனை செய்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தாா்.
அதன்படி, கடந்த 40 நாள்களில் மட்டும் திருநெல்வேலி மாநகரத்தில் கஞ்சா விற்பனை குற்றம் சம்பந்தமாக 26 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 45 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களிடமிருந்து 18.335 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு அவா்களில் 4 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
மேலும், மாநகரில் சட்டவிரோதமாக மது விற்ாக 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 52 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். மொத்தம் 1,521 மது பாட்டில்கள்(262 லிட்டா்) பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதே போல பொது இடத்தில் மது அருந்தி பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக 87 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கஞ்சா போன்ற போதைப் பொருகள்கள் விற்பனை செய்பவா்கள், பொதுமக்களுக்கு இடையூறு செய்பவா்கள் மீது கடும் நடவடிக்கை தொடரும் என மாநகர காவல் ஆணையா் நெ.மணிவண்ணன் தெரிவித்துள்ளாா்.