ரகசியம் என்ன? 4 தொடர் வெற்றிகண்ட டி.பி.எம். மைதீன்கான்!
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பேரவைத் தொகுதியில் திமுக சார்பில் 2001, 2006, 2011, 2016 என தொடர்ச்சியாக 4 தேர்தல்களில் வெற்றி வாகை சூடிய பெருமைக்குரியவர் முன்னாள் அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பேரவைத் தொகுதியில் திமுக சார்பில் 2001, 2006, 2011, 2016 என தொடர்ச்சியாக 4 தேர்தல்களில் வெற்றி வாகை சூடிய பெருமைக்குரியவர் முன்னாள் அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான்.
அவர், தனது தேர்தல் அனுபவம் குறித்து கூறியதாவது: 2001 பேரவைத் தேர்தலில் பாளையங்கோட்டை தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை திமுக தலைவர் கருணாநிதி எனக்கு வழங்கினார். அப்போதைய பாளையங்கோட்டை இப்போது போன்ற மாநகரப் பகுதி நிறைந்ததாக இல்லை. பாளையங்கோட்டை ஒன்றியத்தில் உள்ள கிராமங்களும் இத்தொகுதியில் இருந்தன.
அத்தேர்தலில் திமுக-பாஜக கூட்டணி அமைத்து களம் கண்டது. அப்போது பாளையங்கோட்டை ஜவஹர் திடலில் எனக்காக திமுக தலைவர் கருணாநிதி பிரசாரம் செய்தார். பாஜக கூட்டணியில் இருந்ததால் மூத்த தலைவரான எல்.கே. அத்வானியும் எங்களை ஆதரித்து திருநெல்வேலி நகரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பிரசாரம் செய்தார்.
பாஜகவுடன் கூட்டணி அமைத்தபோதிலும்கூட மேலப்பாளையம் மக்கள் எனக்கு வாக்களித்து வெற்றிபெறச்செய்தனர். அந்தத் தேர்தலில் ஒருங்கிணைந்த திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் திமுக கூட்ட ணியில் வெற்றிபெற்ற ஒரே நபர் தான் மட்டுமே. காரணம், நான் எப்போதும் மக்களோடு மக்களாக நின்று பணியாற்றக்கூடியவன்.
எனது தொகுதி மக்களை குடும்ப உறவுகளாகவே பார்த்தேன். எனதுதொகுதிநிதி மூலம் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு கண்டேன். என்னால் முடிந்த அளவுக்கு மக்கள் பணியாற்றியதால் அவர்கள் என்னைத் தொடர்ச்சியாக 4 முறை இந்தத்தொகுதியில் வெற்றிபெற வைத்தனர்.
கருணாநிதி ஆட்சியில் நானும் ஒரு பேரவை உறுப்பினராக இருந்தேன், அவரது அமைச்சரவையில் எனக்கும் ஓரிடம் கிடைத்தது என்பது எனக்குப் பெருமை.
நான் வேறு கட்சிகளுக்கு சென்றுவிட்டு மீண்டும் திமுகவில் இணைந்தபோது திமுக தலைவர் கருணாநிதியிடம் மேடையிலேயே பகிரங்கமாக மன்னிப்பு கோரினேன். ஆனால் அவரோ மறப்போம். மன்னிப்போம் என்பதுதானே அண்ணாவின் கொள்கை' எனக் கூறி என்னை அரவணைத்தார்.