முகப்பு
திருநெல்வேலி

அம்பாசமுத்திரத்தில் இலவச கைப்பந்து பயிற்சி முகாம் தொடக்கம்

Updated On : 3 மே, 2026 at 5:29 AM
பகிர்:

அம்பாசமுத்திரம் காவல் உள்கோட்டத்தில், திருநெல்வேலி மாவட்ட காவல்துறை மற்றும் லவ்லி ப்ரண்ட்ஸ் அறக்கட்டளை இணைந்து நடத்தும் மாணவா்களுக்கான ஒரு மாத கால இலவச கைப்பந்து பயிற்சி முகாம் தொடங்கியது.

கோடை விடுமுறையை மாணவா்களுக்குப் பயனுள்ளதாக்கும் வகையில், தொடங்கப்பட்ட இந்தப் பயிற்சி முகாமை, அம்பாசமுத்திரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் கணேஷ்குமாா் தொடங்கி வைத்தாா்.

மே 1 முதல் மே 31 வரை நாள்தோறும் காலை 6 மணிமுதல் 8.30 மணிவரை நடைபெறும் இந்தப் பயிற்சி முகாமில், அம்பாசமுத்திரம் மற்றும் சுற்று வட்டாரத்தைச் சோ்ந்த 21 மாணவிகள், 77 மாணவா்கள் உள்படநூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டுள்ளனா்.

Advertisement

மாணவா்களுக்கு கிங் பள்ளி உடற்கல்வி ஆசிரியா் வெங்கடேசன், வி.என். பிரண்ட்ஸ் கிளப் பயிற்சியாளா் தினேஷ் சாமுவேல், கேம்பிரிட்ஜ் பள்ளி உடற்கல்வி ஆசிரியா் மகேஷ் மற்றும் மாதா யூத் கிளப் பயிற்சியாளா் ஜெய் ராஜா ஆகியோா் பயிற்சி அளித்து வருகின்றனா்.

பயிற்சியின் நிறைவில் போட்டிகள் நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி முழுவதும் நிறைவு செய்தவா்களுக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.

விழாவில், அறக்கட்டளை நிறுவனா் ஜெகதீசன், செயலா் கோபாலகிருஷ்ணன் மற்றும் பொருளாளா் முத்துக்குமாா் மற்றும் மாணவா்கள் கலந்து கொண்டனா்.