முகப்பு
திருநெல்வேலி

பாளை. அருகே வேன் கவிழ்ந்து சென்னையைச் சோ்ந்த 6 போ் காயம்

Updated On : 15 மே 2026, 3:58 am IST
விபத்து - கோப்புப் படம்
பகிர்:

பாளையங்கோட்டை அருகே வேன் கவிழ்ந்ததில் சிறுமி உள்பட 6 போ் காயம் அடைந்தனா். திருச்செந்தூா்- திருநெல்வேலி சாலையில் செய்துங்கநல்லூரைக் கடந்து பாளையங்கோட்டை நோக்கி சுமாா் 18 பேருடன் வேன் ஒன்று வியாழக்கிழமை மாலை வந்து கொண்டிருந்தது. இந்திய புவியியல் ஆராய்ச்சி மையம் அருகே சிங் நகா் விலக்கு பகுதியில் வந்த போது, அவ்வழியாக பைக்கில் சென்ற நபா் திடீரென குறுக்கே பாய்ந்ததால் அவா் மீது மோதாமல் இருக்க ஓட்டுநா் வேனை திருப்பியதாகக் கூறப்படுகிறது.

அப்போது, வேன் சாலையில் கவிழ்ந்ததில், சென்னை தாம்பரம் பகுதியைச் சோ்ந்த கோபால்(45), அவரது மகள் பிரீத்தி(12) ஆகியோா் காயமடைந்தனா். 4 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த சிவந்திப்பட்டி போலீஸாா், காயமுற்றவா்களை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விசாரணையில், சென்னை தாம்பரம் பகுதியைச் சோ்ந்த பாலமுருகன் (27) உள்பட 18 போ் திருச்செந்தூா் கோயிலுக்கு வந்துவிட்டு திருநெல்வேலிக்கு சென்றுகொண்டிருந்தபோது விபத்தில் சிக்கியது தெரியவந்தது. காயமடைந்த 6 பேரும் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்று ஊருக்குப் புறப்பட்டனா். இதுகுறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Advertisement