முகப்பு
கன்னியாகுமரி

கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயிலில் பரணேற்று திருவிழா: மார்ச் 7இல் தொடக்கம்

கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் தேஸ்தானத்தில் 24 ஆண்டுகளுக்குப் பின் நடைபெறும் பரணேற்று விழா மார்ச் 7ஆம் தேதி தொடங்கி 18ஆம் தேதி நிறைவடைகிறது.

Updated On : 26 பிப்ரவரி 2019, 1:35 am IST
பகிர்:

கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் தேஸ்தானத்தில் 24 ஆண்டுகளுக்குப் பின் நடைபெறும் பரணேற்று விழா மார்ச் 7ஆம் தேதி தொடங்கி 18ஆம் தேதி நிறைவடைகிறது.
இதுகுறித்து பத்ரகாளி தேவஸ்தான தலைவர் வி. சதாசிவன்நாயர், செயலர் வி. மோகன்குமார், துணைச் செயலர் எஸ். பிஜுகுமார் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் விலோஜனன் நாயர், சசீந்திரன்நாயர், கே. விஜயகுமார், எஸ். கிருஷ்ணகுமார் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியது:
கன்யாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கொல்லங்கோடு பத்ரகாளி அம்மனுக்கு தினசரி பூஜை நடத்த தாய் கோயிலும், தூக்கத் திருவிழா நடத்த மற்றொரு கோயிலும் உள்ளது. மேலும், தாய் கோயில் அருகே 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பரணேற்று திருவிழாவும் நடைபெற்று வருகிறது. தாருகன் என்ற அரக்கனை பத்ரகாளி அம்மன் வதம் செய்யும் நிகழ்வாக நடத்தப்பட்டு வரும் இவ்விழா 24 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது நடைபெறுகிறது.
விழாவின் முதல் நாளான மார்ச் 7ஆம் தேதி காலையில் மகா கணபதி ஹோமம் நடைபெறும். அன்றைய தினம் காலை 8.30 மணிக்கு பரணேற்று நிலத்தில் பரணை நிறுத்துவதற்கும், அங்கு தற்காலிக கோயில் அமைப்பதற்குமான இடத்தை சூலம் எய்து இடம் தேர்வு செய்தல் நடைபெறும். தொடர்ந்து காலை 9 மணிக்கு வளவூர் வீட்டில் அமைந்துள்ள பந்தலில் அம்மனை எழுந்தருளச் செய்தலும், அதைத் தொடர்ந்து பரணேற்று நடைபெறும் இடத்தில் தற்காலிக கோயில் அமைக்கும் பணியும் நடைபெறும். தொடர்ந்து அன்றைய தினம் இரவு 11.30 மணிக்கு உச்சபலியும், இரவு 12 மணிக்கு அம்மன் பரணேற்று நிலத்தில் அமைக்கப்படும் கோயிலுக்கு எழுந்தருளலும் நடைபெறும். இதைத் தொடர்ந்து நள்ளிரவில் திருக்கொடியேற்றம் நடைபெறுகிறது.
தொடர்ந்து மார்ச் 17 ஆம் தேதி இரவு 12.45 மணிக்கு அம்மன் பரணில் எழுந்தருளல் நடைபெறும். இதைத் தொடர்ந்து மார்ச் 18ஆம் தேதி காலை 7 மணிக்கு பத்ரகாளி அம்மன் தாருகனை வதம் செய்தல் நடைபெறும். தொடர்ந்து பிற்பகல் ஒரு மணிக்கு பூஜையுடன் விழா நிறைவடைகிறது.
இந்த விழாவில் குமரி மாவட்டத்திலிருந்தும், கேரளத்திலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்றனர் அவர்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.