கோட்டையடியில் பெண்களுக்கான கைத்தொழில் பயிற்சி முகாம்
கன்னியாகுமரியை அடுத்த கோட்டையடியில் பெண்களுக்கான கைத்தொழில் பயிற்சி முகாம் நடைபெற்றது.
கன்னியாகுமரியை அடுத்த கோட்டையடியில் பெண்களுக்கான கைத்தொழில் பயிற்சி முகாம் நடைபெற்றது.
தமிழ்நாடு கைத்திறன் தொழில் வளர்ச்சி கழகம், கன்னியாகுமரி பூம்புகார் கைவினைப் பொருள்கள் விற்பனை நிலையத்தின் மூலம் கோட்டையடி அருமா கைத்தொழில் பயிற்சி நிலையத்தில் பெண்களுக்கு இலவச கைத்தொழில் பயிற்சி முகாம் 25 நாள்கள் நடைபெற்றது. இம்முகாமில் சுற்று வட்டாரப் பகுதியை சேர்ந்த 30 பெண்கள் பங்கேற்றனர். மாநில விருது பெற்ற கைத்தொழில் பயிற்சியாளர் அருள் ஹெப்ஸி பாய் பயிற்சியளித்தார். குறிப்பாக தென்னை நாரிலிருந்து அழகிய கலை பொருள்கள் செய்யும் பயிற்சி அளிக்கப்பட்டது.
முகாம் நிறைவு நாள் நிகழ்ச்சிக்கு பூம்புகார் விற்பனை நிலைய உதவி இயக்குநர் தருண் தலைமை வகித்து பேசியது: தமிழக அரசு பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதித்திருப்பதால் நார் பொருள்களுக்கு அதிக அளவில் தேவை ஏற்படுகிறது. எனவே, இதில் பயிற்சி பெற்ற பெண்கள் இந்தத் தொழிலை தொடர்ந்து செய்தால் நல்ல லாபம் பெற முடியும். இதற்காக வங்கியின் மூலம் கடன்வசதி பெறும் வசதி உள்ளது. இதை பயிற்சி பெற்ற பெண்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
பூம்புகார் விற்பனை மேலாளர் லட்சுமணன், பயிற்சியாளர் வந்தனா ஆகியோர் உரையாற்றினார். தொடர்ந்து பயிற்சியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.