குழித்துறை அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் காயமடைந்த 4 வயது குழந்தை புதன்கிழமை உயிரிழந்தது.
திருவட்டாறு அருகேயுள்ள மேலே பிலாங்காலை பகுதியைச் சேர்ந்தவர் புல்பாஸ் (38). அப்பகுதியில் மோட்டார் சைக்கிள் பழுதுநீக்கும் கடை நடத்தி வருகிறார். இவர், தனது மனைவி மேரி செலஸ்டின் (32), குழந்தைகள் அக்ஷயா (10), அர்ஷித் (4) ஆகியோருடன், கடந்த செவ்வாய்க்கிழமை மோட்டார் சைக்கிளில் களியக்காவிளை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
குழித்துறை பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்துக்கு சென்று கொண்டிருந்த தமிழக அரசுப் பேருந்து மோதியதில், 4 பேரும் தூக்கிவீசப்பட்டனர். இதில், மேரி செலஸ்டின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த குழந்தை அர்ஷித் உள்ளிட்ட 3 பேரையும் அப்பகுதியினர் மீட்டு திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு புதன்கிழமை இரவு குழந்தை அர்ஷித் உயிரிழந்தது.
இந்த விபத்து குறித்து களியக்காவிளை போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.