நாகர்கோவிலில் அனுமதியின்றி கட்டப்பட்ட 8 கட்டடங்களுக்கு சீல்
நாகர்கோவிலில் முறையான அனுமதியின்றி கட்டப்பட்டிருந்த 1 வீடு உள்ளிட்ட 8 வர்த்தக நிறுவனங்களுக்கு
நாகர்கோவிலில் முறையான அனுமதியின்றி கட்டப்பட்டிருந்த 1 வீடு உள்ளிட்ட 8 வர்த்தக நிறுவனங்களுக்கு நீதிமன்ற உத்தரவின்பேரில் செவ்வாய்க்கிழமை சீல் வைக்கப்பட்டது.
நாகர்கோவில் நகரில் முக்கிய இடங்களில், நகராட்சி மற்றும் உள்ளூர் திட்ட குழுமத்தின் அனுமதியின்றி கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து, நகராட்சி பகுதிகளில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில், பல்வேறு கட்டடங்கள் குறித்து நகராட்சி அதிகாரிகளும், உள்ளூர் திட்டக் குழும அதிகாரிகளும் நடவடிக்கை மேற்கொண்டனர். இதில், முதல் கட்டமாக கடந்த 18 ஆம் தேதி நாகர்கோவில் நீதிமன்ற சாலையில் உள்ள சூப்பர் மார்க்கெட், கே.பி. சாலையில் உள்ள ரத்தப் பரிசோதனை நிலையம், வணிக வளாகம் உள்ளிட்ட 8 கட்டடங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.
இந்நிலையில், நகராட்சி அதிகாரிகள் மற்றும் உள்ளூர் திட்டக் குழும அதிகாரிகள் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள வர்த்தக நிறுவனம், ஆட்சியர் அலுவலக சாலையில் உள்ள வணிக வளாகம், உணவகம் மற்றும் ஒரு வீடு உள்ளிட்ட 8 நிறுவனங்கள் முறையான அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ளதாக கூறி, அவற்றை பூட்டி சீல் வைத்தனர்.