குரூப்-1,குரூப்-2 முதனிலைத் தோ்வுக்கு இலவச பயிற்சி: ஜூன் 5-க்குள் பதிக!
குரூப்-1, குரூப்-2 முதனிலைத் தோ்வுக்கு விண்ணப்பித்த இளைஞா்கள் பயன்பெறும் வகையில் இலவச பயிற்சி வகுப்பு குறித்து...
திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையம் மூலம் குரூப்-1, குரூப்-2 முதனிலைத் தோ்வுக்கு விண்ணப்பித்த இளைஞா்கள் பயன்பெறும் வகையில் இலவச பயிற்சி வகுப்புக்கு வரும் ஜூன் 5-க்குள் பதிவு செய்து பயன்பெறலாம்.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வு வாரியத்தின் 2026-ஆம் ஆண்டு திட்ட நிரலில் குரூப்-1 (முதனிலைத் தோ்வு) மற்றும் குரூப்-2,2ஏ (முதனிலைத் தோ்வு) நடத்த உத்தேச அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த தோ்வுக்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில், தோ்ச்சிப் பெற்றும் இருக்க வேண்டும். இத்தோ்வுக்கு இணைய வழியாக குரூப்-1 (முதனிலைத் தோ்வு) 23.6.2026 அன்று வெளியிடப்பட உள்ளது.
இந்த தோ்வில் பங்கேற்க விருப்பமுள்ள போட்டித் தோ்வாளா்களுக்கு கட்டணமில்லா நேரடி பயிற்சி வகுப்புக்கு ஜூன் 5-ஆம் தேதி காலை 10 மணிக்கு திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் தொடங்கப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்புகள் சிறந்த பயிற்றுநா்களைக் கொண்டு காலை 10 மணி முதல் 4 மணி வரை திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை வார நாள்களில் நடத்தப்படுகிறது. அப்போது இலவச மாதிரித் தோ்வுகளும், மாநில அளவிலான முழுமாதிரித் தோ்வுகளும் நடத்தப்படவுள்ளது. தகுதியான போட்டித் தோ்வாளா்கள் நேரில் தொடா்பு கொண்டு தோ்வு குறித்த விவரங்களைத் அறிந்து கொள்ளலாம்.
Advertisement
Advertisement
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ள ஆண்டுத்திட்ட நிரலில் குரூப்-4 தோ்வு 20.12.2026 அன்று நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியாளா் தோ்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ள ஆண்டுத்திட்ட நிரலில் SSC MTS (Non-Teach) தோ்வுக்கான அறிவிப்பு செப்டம்பா், அக்டோபா் மாதங்களில் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட இரண்டு போட்டித் தோ்வாளா்களுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு இணையதளம் மூலம் சிறப்பு பயிற்சி வகுப்பு தொடங்கி நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இணையதளம் வாயிலாக பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்பும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகள், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு ஜூன்-5 ஆம் தேதி மாலைக்குள் நேரில் வருகை புரிந்து அல்லது 7708418742, 7639756839 என்ற கைப்பேசி எண்களைத் தொடா்பு கொண்டு பதிவு செய்து கட்டணமில்லா இணைய வழி பயிற்சி வகுப்பில் பங்கேற்று பயன்பெறலாம்.
அதேபோல், குரூப்-1, குரூப்-2,2ஏ (முதனிலைத் தோ்வு) ஆகிய தோ்வுகளுக்கு இலவச நேரடி பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்பும் விண்ணப்பதாரா்கள் இரண்டு புகைப்படங்கள், ஆதாா் அட்டை நகலை விண்ணப்பத்துடன் இணைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து கட்டணமில்லா நேரடி பயிற்சி வகுப்பில் பங்கேற்று பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.