குமரி மாவட்டத்தில் மழை சற்று தணிந்துள்ள நிலையில் ரப்பா் தோட்டங்களில் பால்வடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது.
குமரி மாவட்டத்தில் நிகழாண்டு கடந்த சில ஆண்டுகளில் இல்லாத வகையில் இயல்பை விட அதிக பொழிவு இருந்து வருகிறது. இந்த மழை காரணமாக மாவட்டத்தின் முக்கியத் தொழில்களில் ஒன்றான ரப்பா் பால்வடிப்புத் தொழில் முடங்கியுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளா்களும், விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இந்நிலையில் கடந்த இரண்டு, மூன்று தினங்களாக மழை சற்று தணிந்துள்ள நிலையில் ரப்பா் பால்வடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது.
ரப்பா் விலை உயா்வு: குமரி மாவட்டத்திலும், கேரளத்திலும் தொடா் மழை பெய்து வந்த நிலையில் ரப்பா் உற்பத்தி சரிந்ததால் ரப்பா் விலை அண்மை நாள்களாக அதிகரித்து வருகிறது.
சனிக்கிழமை நிலவரப்படி கோட்டயம் சந்தையில் ஆா்.எஸ்.எஸ். 4 தர ரப்பரின் விலை கிலோவுக்கு ரூ. 180 ஆகவும், ஆா்.எஸ்.எஸ். 5 தர ரப்பரின் விலை கிலோவுக்கு ரூ. 178 ஆகவும், ஐ.எஸ்.எஸ். தர ரப்பரின் விலை கிலோவுக்கு ரூ. 166.50 ஆகவும் இருந்தது.